மாணவர்களுக்கு முழு உரிமை உள்ளது!அமைதியான வழியில் போராட நீட் தேர்வு வினாத்தாள் கசிவைக் கண்டித்து நாடு தழுவிய அளவில் நடந்த மாணவர்கள் போராட்டத்தின் போது, காவல்துறையினர் மிதமிஞ்சிய பலத்தைப் பயன்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் மிக முக்கிய இடைக்கால உத்தரவுகளைப் பிறப்பித்து அதிரடி காட்டியுள்ளது. தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, "அரசியலமைப்புச் சட்டத்தின்படி அமைதியான வழியில் போராட மாணவர்களுக்கு முழு உரிமை உள்ளது" என்பதை நீதிபதிகள் ஆணித்தரமாகச் சுட்டிக்காட்டினர். அத்துடன், மாணவர்கள் மீது நடத்தப்பட்ட அத்துமீறல்கள் மற்றும் காவல்துறையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து முழுமையாக விசாரிக்க, உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு (SIT) அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அமர்வு தெரிவித்தது. டெல்லி ஜந்தர் மந்தர், பீகார், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தடிஅடி, பெல்லட் துப்பாக்கிகள் மற்றும் எலக்ட்ரிக் லத்திகளைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தியதாகக் கூறி ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இளைஞர் ஒருவரின் உடல் கடுமையாகப் பாதிப்புபெல்லட் குண்டு மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யா காந்த், "காவல்துறை நடத்திய பெல்லட் குண்டு வீச்சில் இளைஞர் ஒருவரின் உடல் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. மற்றொருபுறம் உயிருக்கே பேராபத்தை ஏற்படுத்தக்கூடிய மின்சார லத்திகளைக் கொண்டு தாக்கியிருக்கிறார்கள். ஒரு மூத்த காவல்துறை அதிகாரி, இளம் பெண் என்றும் பாராமல் கன்னத்தில் அறைகிறார். சில இடங்களில் பெண்களிடம் காவல்துறையினர் அத்துமீறியும் நடந்து கொண்டுள்ளனர். இத்தனைக்கும் மாணவர்கள் மிகவும் அமைதியான முறையில்தான் போராடியிருக்கிறார்கள்! அப்படிப்பட்ட அமைதியான போராட்டத்திற்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்துறையினரே, அவர்களைக் கொடூரமாகத் தாக்கியிருப்பது ஏன்? எனவே, இந்த விவகாரத்தில் ஒரு சுதந்திரமான தனி அமைப்பின் மூலம் ஏன் விசாரணை நடத்தக் கூடாது?" என்று மிகவும் காரசாரமாகக் கேள்வி எழுப்பினார். விதிமுறைகள் காவல்துறையினருக்கும் பொருந்தும் மனுதாரர்கள் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் தனது காரசாரமான வாதங்களை முன்வைத்தார். "இந்த அத்துமீறல்கள் ஏதோ ஒரு இடத்தில் மட்டும் நடக்கவில்லை; நாடு முழுவதிலும் நடந்துள்ளது. பீகார், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் எனப் பல மாநிலங்களில் மாணவர்களுக்கு எதிராகக் காவல்துறையினர் தங்களின் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்துள்ளனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக ஏற்கனவே தெளிவான வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளபோதிலும், அவற்றை அதிகாரிகள் முற்றிலுமாகப் புறக்கணித்துள்ளனர். பல காவல் அதிகாரிகள் சீருடைகளும், அடையாளப் பேஜ்களும் இல்லாமலேயே தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் உண்மையிலேயே காவல்துறையினர்தானா என்ற பலத்த சந்தேகமே எழுகிறது! உச்சநீதிமன்றம் பொதுமக்கள் சட்டத்தைக் கையில் எடுக்கக் கூடாது என்பது எந்த அளவிற்கு முக்கியமோ, அதே விதிமுறைகள் காவல்துறையினருக்கும் பொருந்தும்! எனவே, வரம்பு மீறிச் செயல்பட்ட அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் தனி விசாரணை நடத்தப்பட வேண்டும்; ஆனால், அந்த விசாரணைக்கு ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஒருவர் மட்டுமே தலைமை தாங்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார். மனுதாரர் தரப்பின் மற்றொரு மூத்த வழக்கறிஞரான ஷியாம் திவான் வாதிடுகையில், "நாட்டின் பல்வேறு இடங்களில் இளைஞர்களைக் காவல்துறையினர் அச்சுறுத்தும் பாணியில் நடந்து கொண்டுள்ளனர். குறிப்பாக மும்பையில், இளைஞர் ஒருவர் மீது போலி போதைப்பொருள் வழக்குப்பதிவு செய்து வாழ்க்கையை சீரழித்து விடுவதாக அதிகாரி ஒருவர் மிரட்டியுள்ளார்! பீகார் மாநிலத்தில் இன்னும் ஒருபடி மேலே சென்று, ஏகே-47 (AK-47) ரகத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தியுள்ளனர். 13 வயதேயான சிறுவனைக் கூட விட்டுவைக்காமல் சிறையில் அடைத்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை 40 மணி நேரத்திற்குப் பிறகே நீதிபதி முன் ஆஜர்படுத்தியுள்ளனர். இது அப்பட்டமான சட்ட மீறல்! பீகார்: காவலர் கையில் AK-47 அதுமட்டுமின்றி, போராட்டக்களத்திற்குச் சென்ற வழக்கறிஞர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாருடைய அறிவுறுத்தலையும் கேட்கும் நிதானமான மனநிலையில் டெல்லி காவல்துறை இல்லை" என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். மேலும், அமைதி வழியில் போராடிய பெண் போராட்டக்காரரை மூத்த அதிகாரி ஒருவர் கன்னத்தில் அறைந்த சம்பவத்தையும், டெல்லியில் போராட்டம் முடிந்து திரும்பிக்கொண்டிருந்த மாணவர்களை வழக்கறிஞர்கள் முன்னிலையிலேயே காவல்துறையினர் விரட்டி விரட்டித் தாக்கிய கொடூரத்தையும் வழக்கறிஞர்கள் அமர்வின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர். களம்: தில்லி அதிரும் போராட்டங்கள் - 'ஜென் ஜி தலைமுறையின் இன்னொரு முகம்' | இரா.சிந்தன் உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்து மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார்: "போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை. ஆனால், இந்த போராட்டத்தை முதலீடாக வைத்து உள்ளே புகுந்த குற்றப்பின்னணி கொண்ட சமூக விரோதிகளும், பாலியல் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் வழக்குகளில் தொடர்புடையவர்களுமே வன்முறையைத் தூண்டிவிட்டனர்" என்று சுட்டிக்காட்டினார். தொடர்ந்து பேசிய அவர், "இந்தச் சம்பவங்களில் 250-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் படுகாயமடைந்துள்ளனர். காவல்துறையின் மனஉறுதியைக் குலைக்கும் வகையில் எந்த உத்தரவும் அமைந்துவிடக் கூடாது. இந்த விவகாரத்தில் உண்மையைக் கண்டறிய அரசே முன்வந்து அனைத்துத் தரவுகளையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்" எனத் தெரிவித்தார். உச்சநீதிமன்றம் அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கில் பல முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தனர். உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள முக்கிய உத்தரவுகள் இதோ: சம்பவம் நடந்த பகுதிகளில் பதிவான அனைத்து சிசிடிவி (CCTV) காட்சிகள், ட்ரோன் (Drone) வீடியோக்கள், பாடி கேமரா (Body Camera) பதிவுகள் மற்றும் பிசிஆர் (PCR) அழைப்பு விவரங்களை எவ்விதச் சேதமுமின்றிப் பாதுகாக்க வேண்டும். போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்களின் புகைப்படங்கள், முகவரி உள்ளிட்ட தனிநபர் விவரங்கள் மற்றும் டிஜிட்டல் தரவுகளைப் பொதுவெளியில் கசியவிடக் கூடாது. குற்றப்பின்னணி எதுவும் இல்லாத மாணவர்கள் மீது எவ்விதக் கடுமையான நடவடிக்கையோ அல்லது பழிவாங்கும் நடவடிக்கையோ எடுக்கப்படக் கூடாது. பீகார் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் காவலில் அடைக்கப்பட்டுள்ள 18 வயதிற்குட்பட்ட சிறுவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். டெல்லி, மகாராஷ்டிரா, பீகார், கேரளா, மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இறுதியாக, "ஜனநாயக நாட்டில் போராட்டம் நடத்துவதற்கான உரிமை அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறை தனது வரம்பை மீறிச் செயல்பட்டிருந்தால், சட்டம் தன் கடமையைச் செய்யும்" என தலைமை நீதிபதி திட்டவட்டமாகத் தெரிவித்தார். அனைத்து மாநில அரசுகளின் அறிக்கைகளும் வரப்பெற்ற பிறகு, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் உயர்மட்ட விசாரணைக் குழு அமைப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறி, வழக்கை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/government-and-politics/judiciary/neet-protest-supreme-court-slams-delhi-police-over-lathi-charge-on-peaceful-protesters




