உலகெங்கும் வாழும் மக்களின் உரிமைகள், சுகாதாரம், பாலின சமத்துவம் மற்றும் நிலையான வளர்ச்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் 'ஜூலை 11' அன்று உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு ‘உலக மக்கள் தொகை தினம்’ இன்று (ஜூலை 11) கடைப்பிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளில் இந்த தினம் கொண்டாடப்படும். இந்த ஆண்டிற்கான கருப்பொருள் "இன்றைய மற்றும் எதிர்கால இளைஞர்களின் நம்பிக்கைகள் மற்றும் லட்சியங்களை நனவாக்குதல்" என்பதாகும். கருப்பொருள் உணர்த்துவது என்ன? இந்த கருப்பொருள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கூறுகையில், "உலகம் முழுவதும் உள்ள இளைஞர்கள், பொதுவான சவால்களை எதிர்கொள்வதற்கு பல்வேறு வகைகளில் முன்வந்து செயல்படுகின்றனர். அவர்களின் உறுதிப்பாட்டிற்கு ஈடுகொடுக்கும் வகையில் நாமும் கல்வி, பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம், எதிர்பார்ப்பை உள்ளடக்கிய கண்ணியமான வேலைவாய்ப்பு, முடிவெடுக்கும் செயல்முறைகளில் உண்மையான பங்களிப்பு ஆகியவற்றுக்கான கூடுதல் முதலீடுகளை செய்ய வேண்டும்," என்று குறிப்பிட்டார். வரலாற்று பின்னணி கடந்த 1987 ஆம் ஆண்டு ஜூலை 11 அன்று உலக மக்கள் தொகை 500 கோடியைத் தொட்டது. இந்த மைல்கல் உலக நாடுகளிடையே பெரும் விழிப்புணர்வையும் பொதுமக்களிடையே மிகுந்த ஆர்வத்தையும் ஏற்படுத்தியது. இந்த வரலாற்று முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது '1989' ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் ஆளும் குழு இந்தத் தினத்தை ஆண்டுதோறும் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு நிரந்தர நாளாக அறிவித்தது. அதன்படி, 1990 ஜூலை 11 முதல் உலக மக்கள் தொகை தினம் அதிகாரப்பூர்வமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 830 கோடியை தாண்டிய மக்கள் தொகை 2026 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை சுமார் '830 கோடியை' கடந்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் (UN) சமீபத்திய மக்கள் தொகை கணிப்புகளின்படி, தற்போதிலிருந்து வரும் 2050 ஆம் ஆண்டிற்குள் உலக மக்கள் தொகையில் ஏற்படப்போகும் ஒட்டுமொத்த வளர்ச்சியில் பாதிக்கும் மேற்பட்ட பங்களிப்பை வெறும் 8 நாடுகள் மட்டுமே வழங்க உள்ளன. அதில் முதலிடத்தில் இந்தியா உள்ளது. அதற்கு அடுத்தபடியாக நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ ஜனநாயக குடியரசு, எத்தியோப்பியா, தான்சானியா, பிலிப்பைன்ஸ், எகிப்து ஆகிய நாடுகள் உள்ளன. மக்கள் தொகை தினத்தின் நோக்கங்கள் 2026-ஆம் ஆண்டிற்கான உலக மக்கள் தொகை தினமானது, மக்கள் தொகை தொடர்பான சிக்கல்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், அனைவருக்கும் சிறந்த சுகாதாரம், கல்வி மற்றும் சம வாய்ப்புகளை உறுதி செய்வதன் மூலம் நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. எனவே, உலகளாவிய மக்கள் தொகை சவால்கள் மற்றும் சமூகத்தின் மீது அவற்றின் தாக்கம் குறித்து உலகம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் கட்டுரை எழுதுதல், குழு விவாதங்கள், வினாடி-வினா மற்றும் போஸ்டர் தயாரித்தல் போன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன. இலவச மருத்துவப் பரிசோதனைகள், குடும்பக் கட்டுப்பாடு குறித்த ஆலோசனை, தாய்மைக்கால மருத்துவப் பராமரிப்பு மற்றும் பிரசவ கால சுகாதாரச் சேவைகள் வழங்கப்படுகின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/special-news/world-population-day-2026-theme-objectives-and-significance




