மதுரை, சரியாக படிக்கவில்லை என ஆசிரியை கண்டித்ததால் மனமுடைந்த பிளஸ் 1 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் சமயநல்லூர் பகுதியை சேர்ந்தவர் அந்திஸ்வரன். இவருடைய மனைவி ஆனந்த லட்சுமி. இந்த தம்பதியின் மகள் ஜீவிதா (16 வயது). இவர், அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இந்த நிலையில் சரியாக படிக்கவில்லை என ஒரு ஆசிரியை, மாணவி ஜீவிதாவை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவருத்தம் அடைந்த ஜீவிதா நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த சமயநல்லூர் போலீசார் அங்கு சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவி கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே மாணவி படித்த அரசு பள்ளி முன்பாக அவரது உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவியின் சாவுக்கு காரணமான ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த அலங்காநல்லூர் போலீசார் அங்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/teacher-scolds-student-over-studies-plus-one-girl-dies-by-suicide




