பியூனஸ் அயர்ஸ், அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் 39 வயதான லயோனல் மெஸ்சி, தனது 21 ஆண்டு கால சர்வதேச கால்பந்து போட்டிக்கு சமீபத்தில் முழுக்கு போட்டார். அர்ஜென்டினா அணிக்காக அதிக கோல் அடித்தவர் (207 ஆட்டங்களில் 125 கோல்), உலகக் கோப்பை கால்பந்தில் அதிக ஆட்டங் களில் ஆடியவர் (34 ஆட்டம்) இப்படி பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான மெஸ்சி திடீரென ஓய்வை அறிவித்து விட்டதால் அவருக்கு பிரிவுபசார போட்டியை நடத்தும் வாய்ப்பு கிடைக்காமல் போனது. இந்த நிலையில் பயிற்சியாளர் லயோனல் ஸ்காலோனி மற்றும் அர்ஜென்டினா கால்பந்து சங்கத்தின் நிர்ப்பந்தத்தின் பேரில் கடைசியாக ஒரு சர்வதேச போட்டியில் உள்ளூர் ரசிகர்கள் முன் விளையாட மெஸ்சி ஒப்புக் கொண்டுள்ளார். இதன்படி அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந்தேதி பியூனஸ் அயர்சில் நடைபெறும் ஆப்பிரிக்க நாடான பெனின் அணிக்கு எதிரான நட்புறவு ஆட்டத்தில் அர்ஜென்டினா விளையாடுகிறது. இதற்கான அர்ஜென்டினா அணியில் மெஸ்சியின் பெயரும் இடம் பெற்றுள்ளது. அர்ஜென்டினா கால்பந்து சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'உலகின் சிறந்த வீரர், எங்களின் அடையாளம், எங்கள் கேப்டனை மீண்டும் ஒரு முறை விளையாட வைக்க முடிவு எடுத்துள்ளோம். அவருக்கான பிரியாவிடையை அக்டோபர் 6-ந்தேதி அளிக்க இருக்கிறோம். 2022-ம் ஆண்டு கத்தாரில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் அவருடன் இணைந்து விளையாடிய அனைத்து உலக சாம்பியன்களையும், அவர்களது குடும்பத்தினரையும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறோம். உலகின் ஆகச்சிறந்த வீரரின் கடைசி ஆட்டத்தை காணவிருக்கும் தேசிய அணியின் ஆதரவாளர்களான அனைத்து அர்ஜென்டினியர்களுக்கும் இது மறக்க முடியாத போட்டியாக இருக்கும்' என தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/football/farewell-match-messi-agrees




