மதுரை, செல்போன் செயலி மூலம் கோடிக்கணக்கில் பண மோசடி நடந்த விவகாரத்தில், மேலூரை சேர்ந்த மேலும் ஒரு பெண் கைது செய்யப்பட்டார். பணம் வசூலித்து மோசடி மதுரை மாவட்டம் மேலூரில் எப்.கியூ.எல். என்ற தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. அந்த நிறுவனத்தின் செயலி மூலம் ஆன்லைனில் முதலீடு செய்தால், 2 மாதங்களில் பணம் இரட்டிப்பாகும் என்று கூறப்பட்டது. அதோடு பொதுமக்களிடம் இருந்து முதலீடு பெறுவதற்கு முகவர்களும் நியமிக்கப்பட்டனர். இந்த முகவர்கள், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கிராம மக்களை குறிவைத்து, மூளைச்சலவை செய்து, நிதி நிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்தனர். அதோடு ஒரு சிலருக்கு, முதலீட்டு தொகை இரட்டிப்பாக கிடைத்தது. இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் தலா ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை முதலீடு செய்தனர். மதுரை மத்திய சிறை இந்தநிலையில், அந்த தனியார் நிறுவனம் திடீரென மூடப்பட்டது. இதனால், பணத்தை முதலீடு செய்த மக்கள், முகவர்களின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட மக்கள் மேலூரில் உள்ள திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து இந்த வழக்கு மதுரை பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டு, விசாரணை நடந்து வந்தது. இதற்கிடையே, மோசடி வழக்கில் மேலூர் அருகே உள்ள கட்டையம்பட்டி பகுதியைச் சேர்ந்த ரஞ்சித், பிரியதர்ஷினி ஆகிய தம்பதியினர் கடந்த 7-ந்தேதி திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டில் சரணடைந்தனர். இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் ஒரு பெண் கைது இதற்கிடையே அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது:- கைது செய்யப்பட்ட ரஞ்சித் மற்றும் பிரியதர்ஷினி ஆகியோர் சமூக வலைதளங்கள் மூலம் முதலீடு செய்ய கிராம மக்களிடம் பேசி உள்ளார். நம்பும் வகையில் பேசி ஏமாற்றியதால், ஏராளமானவர்கள் பணத்தை முதலீடு செய்துள்ளனர். அவர்கள் இருவரும் மோசடி செய்ய பயன்படுத்திய செல்போன்கள், வங்கி கணக்குகள் விவரங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. மேலும், அந்த செல்போன்களின் ஐ.பி. முகவரியை வழங்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் சைபர் கிரைம் போலீசார் மூலம் கோரிக்கை வைத்துள்ளோம். அந்த முகவரிகள் கிடைத்தால், இந்த மோசடியின் பின்னணியில் யார், யார் இருக்கிறார்கள் என்ற விவரம் தெரியவரும். அதுபோல், இவர்கள் எவ்வளவு பணம் மோசடி செய்தார்கள் என்ற விவரமும் தெரிந்துவிடும். தேவையான ஏற்பாடுகள் இந்த வழக்கில் இதுவரை, மதுரையில் இருந்து 3 ஆயிரம் புகார்களும், திண்டுக்கல்லில் 4 ஆயிரம் புகார்களும், விருதுநகரில் 30 புகார்களும் வந்துள்ளன. இந்த மோசடியில் போலீசாரின் மனைவிகளும் ஏமாற்றப்பட்டு உள்ளனர். யார், யார் எவ்வளவு பணம் இழந்தார்கள் என்பதை கண்டறியும் பணியும் ஒரு புறம் நடக்கிறது. கோடிக்கணக்கில் பணம் மோசடி நடந்திருப்பதால், ரஞ்சித் மற்றும் அவரது மனைவியிடம் விசாரணை நடத்துவதற்காக, போலீஸ் காவலில் எடுக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே ரஞ்சித்தின் உறவினரான மேலூர் கட்டையம்பட்டியை சேர்ந்த ரேவதி (35) என்பவர், இந்த வழக்கில் மதுரை மாவட்ட கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரையும் கைது செய்து விசாரிக்க இருக்கிறோம். அவரை விசாரித்தால் இன்னும் கூடுதல் தகவல்கள் கிடைக்கும் இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/money-fraud-via-mobile-app-another-woman-from-melur-surrenders




