புதுச்சேரியைப் பூர்வீகமாகக் கொண்டு வெளிமாநில ஆண்களை திருமணம் செய்யும் பெண்களின் குழந்தைகளுக்கு, சாதிச் சான்றிதழ் வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் மறுத்து வருகிறது. அதேசமயம் தந்தையின் இருப்பிடத்தைத் அடிப்படையாகக் கொண்டு, அவர்களுக்கு இடம்பெயர்ந்தவர் சான்றிதழ் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. அதனால் புதுச்சேரியை பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும் அந்தப் பெண்களுக்கும், அவர்களின் குழந்தைகளுக்கும் இட ஒதுக்கீடு பெறுவதில் சிக்கல் நீடித்து வருகிறது. அப்படி பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகள் என 26 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த வழக்கு கடந்த 27-ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பரதச் சக்கரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. புதுச்சேரி அரசு அப்போது, `இந்தியச் சமூகம் பாரம்பர்யமாகத் தந்தைவழி அமைப்பைக் கொண்டது. அதனால் சாதி மற்றும் சமூக நிலை தந்தையின் வழியிலேயே தீர்மானிக்கப்பட வேண்டும்' என்று வாதிட்ட புதுச்சேரி அரசு, ``ஒரு மாநிலத்தில் இடஒதுக்கீடு பெறத் தகுதியுள்ள ஒருவர் மற்றொரு மாநிலத்திற்கு இடம்பெயரும்போது, அதே சலுகையைக் கோர முடியாது' என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும், மத்திய அரசின் அறிவுறுத்தல்களையும் சுட்டிக்காட்டி பூர்வீகச் சான்றிதழை தர முடியாது என்று மறுத்தது. அதேசமயம் மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஸ்டாலின் அபிமன்யு, `தந்தை வழியில் மட்டுமே சாதிச் சான்றிதழ் தரப்படும் என்று கூறுவது அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 14, 15 மற்றும் 16 வழங்கும் பாலினச் சமத்துவத்திற்கு எதிரானது. பிள்ளைகள் புதுச்சேரியிலேயே பிறந்து தாய் வாழும் சமூகச் சூழலில் சவால்களை எதிர்கொள்ளும்போது, தந்தையின் இடம்பெயர்வை காரணம் காட்டி தாயின் உரிமையைப் பறிக்கக் கூடாது" என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பரதச் சக்கரவர்த்தி, ``பழமைவாத தந்தை வழிச் சமூகக் கோட்பாட்டைக் காட்டி பெண்களுக்குச் சம உரிமை மறுக்கப்படுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. எனவே, புதுச்சேரியைப் பூர்வீகமாகக் கொண்ட தாய்மார்களின் சாதி நிலைகளைக் கொண்டு, அவர்களின் பிள்ளைகளுக்கு எஸ்.சி., எம்.பி.சி மற்றும் ஓ.பி.சி சான்றிதழ்களை வருவாய்த்துறை உடனடியாக வழங்க வேண்டும். சென்னை உயர் நீதிமன்றம் புதுச்சேரி அரசு கல்வி நிறுவனங்களின் அட்மிஷன் மற்றும் அரசுப் பணிகளில் முழு இடஒதுக்கீட்டுச் சலுகைகளையும் பெறுவதற்கு அந்தப் பிள்ளைகள் தகுதியுடையவர்கள்" என்று அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறார். புதுச்சேரியில் பல ஆண்டுகளாக நிலவி வந்த சாதிச் சான்றிதழ் பிரச்னை முடிவுக்கு வந்தது என்று புதுச்சேரி பூர்வீகத் தாய்மார்கள் மகிழ்ச்சியாக இருந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் அதில் டிவிஸ்ட் வைத்திருக்கிறது. உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து இரண்டு நீதிபதிகள் உள்ள அமர்வில் புதுச்சேரி அரசு மேல்முறையீடு செய்திருப்பதால், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. புதுச்சேரி: `கார் கொடுத்தீங்க, டிரைவர்?'- `ஹெல்மெட்’ அணியாமல் வந்த ஆளுங்கட்சி எம்எல்ஏ-வுக்கு அபராதம் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/government-and-politics/chennai-high-court-orders-puducherry-govt-as-caste-certificates-must-be-issued-based-on-the-mothers-lineage




