அ.தி.மு.க-விற்குள் உட்கட்சி பூசல் அதிகரித்து வரும் நிலையில், எஸ்.பி. வேலுமணியை அக்கட்சியின் பொதுச்செயலாளராக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அ.தி.மு.க. கோவை குறிச்சி பகுதிச் செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான செந்தில்குமார் என்பவர், குறிச்சி குண்டத்து மாகாளியம்மன் கோவிலில் கடந்த 5 ம் தேதியன்று எஸ்.பி. வேலுமணி அ.தி.மு.க பொதுச்செயலாளராக வர வேண்டுமென அவரது பேனருடன் குண்டம் இறங்கி வேண்டினார். இது வைரலான நிலையில் செந்தில்குமார் கட்சி பதவி பறிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நம்மிடம் பேசிய செந்தில்குமார், “நான் 35 ஆண்டுகளாக கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளேன். எடப்பாடி பழனிசாமி தந்த பதவியை அவரே பறித்துக் கொண்டார். கட்சி பதவி பறிக்கப்பட்டாலும், அடிப்படை உறுப்பினராக தொடர்கிறேன். அ.தி.மு.க என்பது தொண்டர்களின் கட்சி. நாளை வேறு ஒருவர் கட்சியின் பொதுச்செயலாளராக வருவார். அவர் எனக்கு வேறு பொறுப்புகளும் தரலாம். எங்களுக்கும் காலம் வரும். அதுவரை நான் கட்சியில் தொண்டனாக பயணிப்பேன். செந்தில்குமார் எஸ்.பி. வேலுமணி கட்சியின் பொதுச்செயலாளராக வர வேண்டும் என நான் வேண்டியது, தனிமனித சுதந்திரத்திற்கு உட்பட்டது. நான் பொதுவெளியில் பேசவில்லை. கட்சிக்கு எந்த அவப்பெயரையும் ஏற்படுத்தவில்லை. சாமியிடம் தான் வேண்டினேன். இதேபோல கடந்தாண்டு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வர வேண்டுமென வேண்டினேன். அப்போது ஏன் என் கட்சி பொறுப்பை பறிக்கவில்லை? ஹிட்லர் போல சர்வதிகார போக்குடன் எடப்பாடி பழனிசாமி நடந்து கொள்கிறார். தனி நபர் சுதந்திரம், இறை வழிபாடு உரிமை கட்சியில் இல்லையா? இப்படியே ஒவ்வொருவரையும் கட்சியில் இருந்து நீக்கினால் வேலை செய்ய ஆள் வேண்டாமா? உணர்வுபூர்வமான தொண்டர்கள் கட்சியில் இல்லை. அதனால் காசு கொடுத்து கட்சி வேலைகளை செய்ய வேண்டியுள்ளது. காசு கொடுத்து ஆட்களை கூட்டி வரும் என்னை கட்சியில் இருந்து நீக்கினால், யார்தான் ஆட்களை அழைத்து வருவார்? என்னை கட்சி பதவியில் இருந்து நீக்கியதில், எனக்கு எந்த வருத்தமும் இல்லை. கட்சி பதவியை வைத்து தொழில் செய்பவன்தான், வருத்தம் அடைவான். நான் எந்த குற்றமும் செய்யவில்லை. கட்சியை காப்பாற்ற வேண்டுமென சாமியிடம்தான் வேண்டினேன். நாளை ஒரு குப்பனோ, சுப்பனோ கூட அ.தி.மு.க பொதுச்செயலாளராக வருவார். இரட்டை இலையை காப்பாற்றுவார். அவருடன் இணைந்து நான் பணியாற்றுவேன். எந்த சூழலிலும் மாற்றுக் கட்சிக்கோ, மாற்று தலைவரையோ தேடி நான் செல்லமாட்டேன்” என்றார். ’பாட்டிலுக்கு பத்து ரூபாயை ஒழிப்பதற்கே ஆன்லைன் பரிவர்த்தனை’ – அமைச்சர் விக்னேஷ் விளக்கம்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/government-and-politics/admk-functionary-stripped-of-post-after-walking-on-fire-in-support-of-sp-velumani




