வேலூர், 2 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்வதாக கூறி ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2 கோடியே 23 லட்சம் மோசடி செய்த தனியார் பள்ளி உரிமையாளரை வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். 2 ஏக்கர் நிலம் விற்பனை வேலூர் காட்பாடி தாலுகா கார்ணாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 50), ரியல் எஸ்டேட் அதிபர். இவருக்கும், வேலூர் டிட்டர் லைன் பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி உரிமையாளர் ஆதவன் பிரகாஷ் (58) என்பவருக்கும் குடியாத்தம் அருகே நிலம் வாங்கிய போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆதவன் பிரகாஷ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சங்கரை தொடர்பு கொண்டு திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தில் மெட்ரிக் பள்ளியுடன் கூடிய 2 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தின் பத்திரத்தை சென்னையில் உள்ள தனியார் வங்கியில் அடமானம் வைத்து ரூ.1½ கோடி கடன் வாங்கி உள்ளேன். அதற்கு தற்போது வட்டியுடன் சேர்த்து கடன் ரூ.1 கோடியே 66 லட்சம் உள்ளது. பள்ளியுடன் கூடிய 2 ஏக்கர் நிலத்தை ரூ.5 கோடிக்கு விற்பனை செய்ய உள்ளேன். விருப்பம் இருந்தால் அந்த இடத்தை வாங்கி கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். ரூ.2.23 கோடி மோசடி அதற்கு சம்மதம் தெரிவித்த சங்கர் முதற்கட்டமாக ரூ.2 கோடியே 23 லட்சத்து 35 ஆயிரம் கொடுத்தார். மீதமுள்ள பணத்தை பத்திரம் பதிவு செய்யும் சமயத்தில் கொடுப்பதாக கூறினார். பணத்தை வங்கியில் செலுத்திவிட்டதாக கூறிய ஆதவன் பிரகாஷ் பத்திரத்தை சங்கரின் பெயருக்கு பதிவு செய்து கொடுக்காமல் காலதாமதம் செய்துள்ளார். வட்டி, அசல் எதுவும் செலுத்தவில்லை இதனால் சந்தேகம் அடைந்த சங்கர் சென்னைக்கு சென்று தனியார் வங்கியில் இதுபற்றி கேட்டுள்ளார். அப்போது அந்த நிலத்தின் பெயரில் தற்போது ரூ.4 கோடியே 46½ லட்சம் கடன் நிலுவை தொகை இருப்பதும், இதுவரை அவர் வட்டி, அசல் தொகை எதுவும் செலுத்தவில்லை என்றும் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். தனியார் பள்ளி உரிமையாளர் கைது அதனால் அதிர்ச்சி அடைந்த சங்கர் வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில், ஆதவன் பிரகாஷ் நிலத்தை விற்பனை செய்வதாக கூறி சங்கரிடம் ரூ.2 கோடியே 23 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-223-crore-fraud-against-real-estate-tycoon-private-school-owner-arrested




