சென்னை, சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து கடந்த 4-ந்தேதி டெல்லிக்கு புறப்பட்ட தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில், மறுநாள்(5-ந்தேதி) ஆக்ரா கண்டோன்மெண்ட் ரெயில் நிலையத்திற்கு சென்றடைந்தது. அப்போது அந்த ரெயிலின் பொதுப்பெட்டியில் ஒரு பையில் இருந்து துர்நாற்றம் வீசியதை அங்கிருந்த பயணிகள் கவனித்தனர். மேலும் அந்த பையில் இருந்து ரத்தம் கசிந்ததால் உடனடியாக ரெயில்வே போலிசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து ரெயில்வே போலீசார் அந்த பையை திறந்து பார்த்தபோது, அதில் மனித உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு பிளாஸ்டிக் பைகளில் சுற்றி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதில் தலை உள்பட பல்வேறு பாகங்கள் இல்லாமல் இருந்தன. அதே சமயம், சென்னையில் உள்ள பிரபல ஜவுளிக்கடையின் பெயரைக் கொண்ட பிளாஸ்டிக் கவர் அந்த பையில் இருந்தது. இதன் மூலம், அதிகாரிகளின் விசாரணை சென்னையை நோக்கி திரும்பியது. சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் ஆகியோர் சம்பந்தப்பட்ட இந்த பையை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளனர் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சென்னை புறநகர் ரெயில் நிலையங்களில் உள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தபோது, அந்த ஜோடி கூடுவாஞ்சேரி ரெயில் நிலையத்தில் இறங்கி, பின்னர் அங்கிருந்து ஒரு ஆட்டோவில் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த ஆட்டோ டிரைவரை தேடிக் கண்டுபிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட இருவரையும் எந்த வீட்டில் இறக்கிவிட்டார் என்பதை போலீசாருக்கு அடையாளம் காட்டினார். அந்த வீடு பூட்டப்பட்டு கிடந்ததால் போலீசார் பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். அப்போது அந்த வீடு முழுவதும் ரத்தக்களறியாக காட்சியளித்தது. அதோடு, மனித உடல் பாகங்களை பிரியாணி அண்டாவில் போட்டு, மைதா மாவு மற்றும் காய்கறிகள் சேர்த்து வேகவைத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து வீட்டின் உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அந்த வீட்டில் ஒடிசாவைச் சேர்ந்த மாணிக் உத்தின் லஸ்கர், அவரது மனைவி பகமதி மாஜி மற்றும் ஹைதுல் நிஷா என்ற பெண் ஆகிய 3 பேர் வாடகைக்கு குடியிருந்தனர் என்பது தெரியவந்தது. சி.சி.டி.வி. காட்சிகளில் பதிவாகி இருப்பது மாணிக் உத்தின் லஸ்கர்-பகமதி மாஜி தம்பதியினர்தான் என்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர். எனவே, தற்போது கண்டெடுக்கப்பட்டிருப்பது ஹைதுல் நிஷாவின் உடல் பாகங்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேக்கின்றனர். இந்த விவகாரத்தில் தலை இன்னும் கண்டுபிடிக்கப்படாததால், போலீசார் அதனை தேடி வருகின்றனர். தற்போது கிடைத்திருக்கும் உடல் பாகங்களை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் மாணிக் உத்தின் லஸ்கர்-பகமதி மாஜி தம்பதி தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களின் செல்போன் எண்ணை வைத்து போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்காக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஒடிசா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/shock-in-chennai-murdered-womans-body-boiled-in-a-biryani-cauldron-in-a-gruesome-act




