புதுடெல்லி, மகாத்மா காந்தி தனது நெருங்கிய கூட்டாளியும், சுதந்திரப் போராட்ட வீரருமான ஆனந்த் டி.ஹிங்கோரனிக்கு எழுதிய, உண்மை, அகிம்சை மற்றும் சேவை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் சார்ந்த 688 கையெழுத்துப் பிரதிகளின் தொகுப்பு ஒன்று, 'சாப்ரானார்ட்' (Saffronart) நிறுவனம் நடத்திய ஏலத்தில் ரூ.16.20 கோடிக்கு விற்பனையானது. இதன் மூலம் ஏலத்தில் விற்கப்பட்ட இந்திய வரலாற்று ஆவணத்திற்கான உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த பிரதிகள் அனைத்தும் மகாத்மா காந்தி தனது கைப்பட எழுதிய கடிதங்கள் ஆகும். ஆனந்த் டி.ஹிங்கோரனியின் மனைவி வித்யா மறைந்த பிறகு, அவருக்கு ஆறுதல் மற்றும் ஊக்கமளிக்கும் வகையில் மகாத்மா காந்தி இந்த கடிதங்களை எழுதியுள்ளார். பின்னர் இந்த கடித பரிமாற்றம் சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்துள்ளது. பின்னாட்களில் இந்த கடிதங்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு "A Thought for the Day" என்ற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டது. இந்த கடிதங்கள் குறித்து ஏல நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மகாத்மா காந்தியின் இந்த கையெழுத்துப் பிரதியானது உண்மை, அகிம்சை, பிரம்மச்சரியம், உடைமை தவிர்த்தல், அச்சமின்மை, மத சமத்துவம், தீண்டாமை ஒழிப்பு, பிரார்த்தனை, ராமநாமம், சேவை, உழைப்பு, பசி, கடமை, சுயராஜ்யம், தார்மீகப் பொறுப்பு, மௌனம், மனசாட்சி, பற்றின்மை, சுய-உணர்தல் மற்றும் இறைவனைத் தேடுதல் ஆகியவற்றைப் பற்றி பேசுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, மகாத்மா காந்தியுடன் தொடர்புடைய கடிதங்கள், கையெழுத்துப் பிரதிகள், புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட பொருட்கள் அடங்கிய 86 தொகுப்புகள் இன்று ஏலத்தில் விடப்பட்டுள்ளன. இதில் குறிப்பாக, கடவுள் மற்றும் பகவத் கீதை குறித்த காந்தியின் சிந்தனைகளை உள்ளடக்கிய, கையெழுத்துப் பிரதி மற்றும் கடிதங்களைக் கொண்ட 'Message on God' (கடவுள் குறித்த செய்தி) என்ற தொகுப்பு, ரூ.1.68 கோடிக்கு விற்பனையானது. இந்த ஏலத்தில் இடம்பெற்ற தனிப்பட்ட பொருட்களில், காந்தியின் 'பெட்டி ராட்டை' (box spinning wheel) மற்றும் 2 கடிதங்கள் ஆகியவை அடங்கிய தொகுப்பு ரூ. 1.02 கோடிக்கு விற்பனையானது. அதே போல், காந்தி எழுதிக்கொண்டிருக்கும் நிலையில் எடுக்கப்பட்ட, அவரது கையொப்பம் இடப்பட்ட புகைப்படம் ரூ.78 லட்சத்திற்கும், பொருளாதார சுதந்திரம் குறித்த காந்தியின் கடிதங்கள், தந்தி செய்திகள் மற்றும் அஞ்சல் அட்டைகள் அடங்கிய தொகுப்பு ரூ.57.60 லட்சத்திற்கும் விற்பனையானது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/letters-handwritten-by-mahatma-gandhi-auctioned-for-rs-162-crore




