வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் இந்திய ஜனநாயக வரலாற்றில் ஒரு மைல்கல்லாகக் கருதப்பட்ட 'நாரி சக்தி வந்தன் அதினியம்' (பெண்கள் இடஒதுக்கீடு சட்டம்), நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்து, அரசியலில் பெண்களின் பங்களிப்புக்கு புதிய நம்பிக்கையை உருவாக்கியது. "பெண்களின் அரசியல் சகாப்தம் தொடங்கிவிட்டது", அதிகாரத்தின் கதவுகள் பெண்களுக்காக திறக்கப்பட்டுவிட்டன", "நிர்வாகத்தின் முகம் இனி மாறப்போகிறது” என்ற உற்சாகம் நாடு முழுவதும் ஒலித்த நிலையில், இன்றைய யதார்த்தம் ஒரு வேதனையான முரண்பாட்டை வெளிப்படுத்துகிறது. இந்திய ஒன்றியத்தின் 28 மாநிலங்களில் ஒரு மாநிலத்தைக் கூட தற்போது ஒரு பெண் முதலமைச்சர் வழிநடத்தவில்லை. பெண்களின் பிரதிநிதித்துவத்தை சட்டம் உறுதி செய்திருந்தாலும், அதிகாரத்தின் உச்சிப் பதவிகளில் அவர்களின் இருப்பு இன்னும் அரிதாகவே உள்ளது. இதனால், சட்டத்தில் கிடைத்த சமத்துவம் அரசியல் தலைமையிலும் நடைமுறையாகப் பிரதிபலிக்கிறதா, அல்லது அது இன்னும் ஒரு நிறைவேறாத ஜனநாயக வாக்குறுதியாகவே இருக்கிறதா? என்ற அடிப்படையான கேள்வி எழுகிறது. ஒட்டுமொத்த இந்தியாவிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்குத் தலைமை தாங்கும் ஒரே பெண் இன்று தேசிய தலைநகர் பிரதேசமான டெல்லியில்தான் உள்ளார். அதுவும், முழுமையான மாநில அந்தஸ்து இல்லாத, பல அரசியலமைப்புச் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட ஒரு யூனியன் பிரதேசம். இதற்கு மாறாக, முழு அதிகாரம் கொண்ட 28 மாநிலங்களிலும் ஒரு பெண் முதலமைச்சர்கூட இல்லாதது, இந்திய அரசியலின் ஆணாதிக்க முகத்தைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது. பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் அரசியல் கட்சிகள் முன்வந்தாலும், அதிகாரத்தின் உச்சிப் பொறுப்புகளை அவர்களிடம் ஒப்படைப்பதில் இன்னும் தயக்கம் நீடிக்கிறது இதுவே பெண்களுக்கும் உயர்ந்த அரசியல் தலைமைக்கும் இடையே இன்னும் ஒரு உடைக்கப்படாத அதிகாரச் சுவர் இருப்பதை உணர்த்துகிறது. ஜனநாயகத்தின் உண்மையான வெற்றி என்பது பெண்கள் சட்டமன்றத்தின் இருக்கைகளை நிரப்புவதில் மட்டும் இல்லை; அரசின் திசையையும், கொள்கைகளையும், நிர்வாகத்தையும் வழிநடத்தும் உயர்ந்த தலைமைப் பொறுப்புகளில் அவர்கள் இயல்பாக அமரும்போதுதான் அது முழுமை பெறும். மாநிலத் தலைமைகளின் மத அடிப்படையிலான அமைப்பைப் பார்வையிட்டாலும், பிரதிநிதித்துவத்தில் குறிப்பிடத்தக்க ஏற்றத்தாழ்வுகள் தென்படுகின்றன. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உட்பட தற்போதைய 31 முதலமைச்சர்களில் 22 பேர் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்களில் நான்கு கிறிஸ்தவர்கள், ஒரு முஸ்லிம், ஒரு சீக்கியர், ஒரு சர்னா மற்றும் இருவர் பௌத்தர் இடம்பெற்றிருந்தாலும், அவர்களின் தலைமை பெரும்பாலும் குறிப்பிட்ட எல்லை மாநிலங்கள் அல்லது தனித்துவமான பிராந்திய அரசியல் சூழல்களுக்குள் மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது. இதனால், மதப் பன்முகத்தன்மை தேசிய அளவில் சமமாகப் பிரதிபலிக்காமல், பிராந்திய அரசியல் அமைப்புகளின் விளைவாகவே வெளிப்படுகிறது. இந்தப் பின்னணியில், மிகவும் கவனிக்கப்பட வேண்டிய அம்சம் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவம்தான். நாட்டின் குறிப்பிடத்தக்க மக்கள் தொகைப் பங்கைக் கொண்டிருந்தாலும், தற்போது இந்தியாவின் எந்த மாநிலத்திலும் ஒரு முஸ்லிம் முதலமைச்சர் பதவியில் இல்லை. இது, இந்திய ஜனநாயகத்தில் தேர்தல் பிரதிநிதித்துவம் மற்றும் அதிகாரப் பிரதிநிதித்துவம் ஆகிய இரண்டிற்கும் இடையே இன்னும் நீடித்துக் கொண்டிருக்கும் இடைவெளியை வெளிப்படுத்தும் முக்கியமாக எடுத்துக்காட்டுகிறது. தற்போது, இந்தியாவில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒரே முதலமைச்சர் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மட்டுமே உள்ளார். உலகிலேயே மூன்றாவது பெரிய முஸ்லிம் மக்கள் தொகையைக் கொண்ட ஒரு நாட்டில், ஒரு முழு சமூகத்தின் உயர்மட்ட அரசியல் பிரதிநிதித்துவம் ஒரே ஒரு பிராந்தியத்தை மட்டுமே சார்ந்திருப்பது, பிரதிநிதித்துவத்தின் பலவீனமான நிலையைக் காட்டுகிறது. இதன் பொருள், ஜம்மு-காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல்கள் ஏதேனும் காரணங்களால் தாமதமடைந்தாலோ, ஜனநாயக நடைமுறைகள் இடைநிறுத்தப்பட்டாலோ அல்லது அரசியல் சூழல் மாறினாலோ, மாநில அல்லது யூனியன் பிரதேசத் தலைமைப் பொறுப்பில் ஒரு முஸ்லிம் முதலமைச்சர்கூட இல்லாத நிலை உருவாகக்கூடும். ஒரு பன்முகத்தன்மை கொண்ட ஜனநாயகத்தில், எந்த ஒரு சமூகத்தின் பிரதிநிதித்துவமும் ஒரே பிராந்தியத்தின் அரசியல் நிலையை மட்டுமே சார்ந்திருக்கக் கூடாது என்பதையே இந்த யதார்த்தம் வலியுறுத்துகிறது. இந்தத் தரவுகள் அனைத்தும் சேர்ந்து ஒரு முக்கியமான உண்மையைச் சுட்டிக்காட்டுகின்றன. இந்திய ஜனநாயகத்தில் தேர்தல் மூலம் பிரதிநிதித்துவம் விரிவடைந்திருந்தாலும், அதிகாரத்தின் உச்சிப் பதவிகள் இன்னும் பாரம்பரிய அரசியல் கணக்குகள், சாதி-மத சமன்பாடுகள் மற்றும் பாதுகாப்பான தேர்தல் சூத்திரங்களின் அடிப்படையிலேயே பகிர்ந்தளிக்கப்படுகின்றன. முதலமைச்சர் போன்ற உயர்ந்த நிர்வாகப் பொறுப்புகளுக்கான தேர்வில், அரசியல் கட்சிகள் புதிய சமூகக் குழுக்களுக்கு வாய்ப்பளிப்பதைவிட, அதிகாரத்தை நிலைநிறுத்தும் பழைய அணுகுமுறைகளையே அதிகம் நம்புகின்றன. எனவே, சட்டமன்ற இடஒதுக்கீடு என்பது சமூக நீதிக்கான ஒரு முக்கியமான தொடக்கம் என்றாலும், அதுவே முழுமையான பிரதிநிதித்துவ ஜனநாயகத்தை உறுதிசெய்ய போதுமானதல்ல. உண்மையான ஜனநாயகம் என்பது தேர்தல் மேடைகளில் சமத்துவம் குறித்து பேசுவதில் இல்லை; நாட்டின் உயர்ந்த நிர்வாகப் பொறுப்புகளை பெண்கள், பட்டியல் சாதியினர், பழங்குடியினர், மதச் சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து சமூகங்களுடனும் சமமாகப் பகிர்ந்து கொள்ளும் அரசியல் மனப்பான்மையில்தான் அதன் வெற்றி அளவிடப்படுகிறது. அரசியல் கட்சிகளின் உள்கட்டமைப்பிலும் தலைமைத் தேர்வு முறைகளிலும் இந்த மாற்றம் நிகழாத வரை, முதலமைச்சர் பதவி அரசியலமைப்பின் உள்ளடக்கிய இலட்சியத்தை முழுமையாக பிரதிபலிக்கும் அதிகார மையமாக அல்லாமல், குறிப்பிட்ட சமூக மற்றும் அரசியல் வட்டாரங்களின் ஆதிக்கம் தொடரும் இடமாகவே இருந்து விடும். வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம். இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே. Link: விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம். உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/literature/why-india-has-zero-female-cms-across-28-states




