புதுடெல்லி, 'நீட்' வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகவும், 'நீட்' தேர்வு தோல்வி காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்தது போன்றவற்றுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 20-ந்தேதி முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கிடையில், நேற்று முன்தினம் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தினர். இந்த பேரணியில் நாடு முழுவதும் இருந்து பல ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்றனர். இவர்களை தடுக்க பல இடங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டன. ஆனாலும் கூட்டம் கட்டுப்படுத்த முடியாதபடி இருந்ததால் தடியடியும், கண்ணீர் புகைக்குண்டுகளும் வீசப்பட்டன. பதிலுக்கு போலீசார் மீது கல்வீச்சும் நடந்ததாக கூறப்படுகிறது. போலீசார் நடத்திய தடியடியில் பல இளைஞர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் நாடாளுமன்றம் அருகே உள்ள ஆர்.எம்.எஸ். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்களும், இளைஞர்களும் தாக்கப்பட்ட இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அனைத்து எதிர்க்கட்சிகளும் இதனை பெரிதாக எடுத்தன. காங்கிரஸ் கட்சியும் மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தை தொடங்கியுள்ளது. நாடு முழுவதிலும் இருந்து டெல்லியில் இளைஞர்கள் குவிவதால், டெல்லியில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி இன்று நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார். அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களிடம் பேசிய அவர், “இந்த போராட்டத்தில் நீங்கள் தனியாக இல்லை. தி.மு.க.வை சேர்ந்த பல எம்.பி.க்கள் இன்று உங்கள் போராட்டத்திற்கு ஆதரவு கொடுப்பதற்காக இங்கு வந்துள்ளனர். உங்கள் பிரச்சினைகள் எங்களுக்கு நன்றாக புரியும். ஏனென்றால் நீட் தேர்வு கொண்டு வரப்பட்ட காலத்தில் இருந்தே, தி.மு.க. அதை எதிர்த்து போராடி வருகிறது. தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளனர். இந்த நுழைவுத் தேர்வுகள் நாட்டில் உள்ள ஏழை, அடித்தட்டு மக்களை பாதிக்கின்றன. அவர்களின் டாக்டர் கனவை சிதைக்கின்றன. வசதி படைத்த குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் மட்டுமே நுழைவுத் தேர்வுக்கு தயாராக முடியும் என்ற சூழல் நிலவுகிறது. இதை தி.மு.க. தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு சட்டமன்றத்தில் மசோதா தாக்கல் செய்தது. ஆனால் மத்திய பா.ஜ.க. அரசின் கவர்னர் அந்த மசோதாவில் கையெழுத்து போடாமல் இழுத்தடித்தார். தற்போது ஜனாதிபதியும் அதில் கையெழுத்திட மறுக்கிறார். தமிழக மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிராக நீண்ட காலமாக போராடி வருகின்றனர். இன்று நீங்கள் முன்னெடுத்துள்ள இந்த போராட்டத்திற்கு எங்கள் ஆதரவை வழங்குவதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் இந்த போராட்டத்திற்கு வந்து கலந்து கொண்டுள்ளனர். டெல்லியில் போராடும் மாணவர்கள் மீது மிகப்பெரிய வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. மாணவர்கள், விவசாயிகள் மீது பா.ஜ.க. அரசுக்கு அக்கறை இருந்தால் இப்படிப்பட்ட வன்முறையை நிகழ்த்தி இருக்க மாட்டார்கள்.” இவ்வாறு அவர் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/dmk-mp-kanimozhi-extends-personal-support-to-the-protest-being-held-by-students-in-delhi




