திருவனந்தபுரம், கேரள மாநிலம் திருவனந்தபுரம் கடல் பகுதியில் ஏற்பட்ட பலத்த கடல் சீற்றம் காரணமாக, அடுத்தடுத்து நிகழ்ந்த இரண்டு படகு விபத்துகளில் 4 மீனவர்கள் கடலில் மூழ்கி மாயமாகினர். முத்துலப்பொழி விபத்து திருவனந்தபுரம் அருகே உள்ள முத்துலப்பொழி முகத்துவாரப் பகுதியில் இன்று அதிகாலை ஒரு பைபர் படகு மீன்பிடித்துவிட்டு கரை திரும்பிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக எழும்பிய ராட்சத அலை, படகைத் தாக்கியதில் அது தலைகீழாகக் கவிழ்ந்தது. மீனவர்கள் மாயம் இதில் படகில் இருந்த ஷிஜின் (வயது 32), பிரீமோன் (வயது 28) ஆகிய இரு மீனவர்கள் அலைகளில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகினர். படகின் உரிமையாளர் ஜோஸ் மற்றும் ஸ்மித் ஆகிய 2 பேர் அதிர்ஷ்டவசமாக நீந்தி கரையை அடைந்து உயிர் தப்பினர். விழிஞ்சம் விபத்து இதேபோல் விழிஞ்சம் துறைமுகப் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மற்றொரு படகும் கடுமையான கடல் சீற்றத்தில் சிக்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் இருந்த 3 மீனவர்கள் உடனடியாக சக மீனவர்களால் மீட்கப்பட்டனர். எனினும், இதில் பயணித்த மேலும் 2 மீனவர்கள் கடலில் மூழ்கி மாயமாகினர். தீவிர மீட்புப் பணி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கடலோரப் பாதுகாப்புப் படையினர், கடலோரக் காவல் துறையினர் மற்றும் உள்ளூர் மீனவர்கள் இணைந்து மாயமான 4 பேரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஆனால், கடலில் தொடர்ந்து அலைகளின் வேகம் அதிகமாக இருப்பதாலும், மோசமான வானிலை நிலவுவதாலும் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மீனவக் கிராமங்களில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/back-to-back-accidents-off-the-thiruvananthapuram-coast-4-fishermen-missing




