ஈரோடு, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இப்பகுதிகளில் யானை, சிறுத்தை, புலி, கரடி, செந்நாய், மான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனப்பகுதியில் இருந்து அவ்வப்போது வெளியேறும் வனவிலங்குகள் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதுடன், கால்நடைகளையும் வேட்டையாடி வருகின்றன. இதனால் வனப்பகுதியையொட்டி வசிக்கும் கிராம மக்கள் அச்சத்துடன் இருந்து வருகின்றனர். கல்குவாரியில் பதுங்கும் சிறுத்தை குறிப்பாக புலி மற்றும் சிறுத்தைகள் மறைவான பகுதிகளில் பதுங்கி கால்நடைகளை வேட்டையாடி வருவதாக கூறப்படுகிறது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் தாளவாடி வனச்சரகத்துக்கு உட்பட்ட சூசைபுரம், தொட்டகாஜனூர், பீம்ராஜ்நகர், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளாக கல்குவாரி பகுதியில் பதுங்கியிருக்கும் சிறுத்தை, ஆடு, மாடு, காவல் நாய்கள் உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இரவு நேரங்களில் கல்குவாரியில் இருந்து வெளியே வரும் சிறுத்தை, கிராமங்களுக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடிவிட்டு மீண்டும் கல்குவாரியில் பதுங்கிக் கொள்வது தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. விவசாயியின் ஆடு மாயம் இந்த நிலையில் சூசைபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மாதேவன் (48), வழக்கம்போல் தனது ஆடு, மாடுகளை மாட்டு கொட்டகையில் கட்டி வைத்துவிட்டு தூங்கச் சென்றார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது ஒரு ஆடு காணாமல் போனது. அப்பகுதியில் சிறுத்தையின் கால்தடம் பதிவாகி இருந்ததால், சிறுத்தை ஆட்டை தூக்கிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக தாளவாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை கல்குவாரியில் பதுங்கி வரும் சிறுத்தை, இரவு நேரங்களில் வெளியே வந்து காவல் நாய்கள், ஆடு, மாடு, கன்றுக்குட்டி உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடி வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து உடனடியாக பிடித்து, பொதுமக்களின் அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/sensation-near-erode-as-leopard-carries-off-a-goat-farmers-in-a-state-of-panic




