சென்னை, மிசா வரலாற்றை மறைக்க முடியாது; மறுக்கவும் முடியாது என்று தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- முதல் - அமைச்சர் சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், சட்டம் - ஒழுங்கு, குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்து விவாதித்து, எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு ஆதாரத்தோடு பதிலளித்து, காவல்துறை நிர்வாகம் - காவல்துறையினருக்கு ஆற்றப்போகும் புதிய திட்டங்களை எடுத்துரைத்து, மக்கள் பணியாற்றிட வேண்டிய இடத்தில், முதல்-அமைச்சர், வெற்று அரசியல் மேடை போல் பேசியிருப்பது வருந்தத்தக்கது. மிசா ஜனநாயகத்தை காப்பாற்ற மிசாவில் ஆயிரக்க்கணக்கான திமுக - தோழமை இயக்கத்தினர் கைது செய்யப்பட்டபோது, அவர்கள் எங்கே இருக்கின்றார்கள், எப்படி இருக்கின்றார்கள், உயிரோடுதான் இருக்கின்றார்களா? என்பது கூட தெரியாமல், பதைபதைப்போடும் தவிப்போடும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில், நாள் கணக்கில் குடும்பம் குடும்பமாக காத்துக்கிடந்த வரலாறு, நாடறியும். ஜனநாயகத்திற்காக சிறை சென்று அடக்குமுறையை, அரச பயங்கரவாதத்தை எதிர்கொண்ட வரலாறு அது. மிசா வரலாறு நாடறியும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெற்றிருப்பது வெறும் தழும்பல்ல; ஜனநாயகம் காக்கும் போராட்டத்தில், அவர் ஏற்றுக்கொண்ட வலியின் வீர அடையாளம்; 'தோன்றுவன் மாதோ, போர்க்களத் தானே!' என்ற புறநானூற்றுத் தாயின் வீரவரிகளுக்கு, வாழும் இலக்கணமான வரலாறு. அந்த வீரவரலாற்றைக் கேலி செய்வது, ஜனநாயகம் காக்கப் போராடிய ஒரு தலைமுறையின் தியாகத்தையே கேலி செய்வதாகும். மிசா வரலாறு நாடறியும், வரலாறு ஒருபோதும் மறக்காது; மறுக்காது; மறைக்காது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/the-history-of-misa-cannot-be-concealed-nor-can-it-be-denied-thamizhachi-thangapandian




