விண்வெளிக்குச் செல்லும் கேரளத்தைச் பூர்வீகமாகக்கொண்ட முதல் நபர் என்ற பெருமையைப் பெற உள்ளார் அனில் மேனன். அமெரிக்க நாசா விஞ்ஞானியான டாக்டர் அனில் மேனனின் விண்வெளிப் பயணம் வரும் ஜூலை 14-ம் தேதி தொடங்குகிறது. 49 வயதான இவர், நாசாவின் அவசரக்கால மருத்துவப் பிரிவு மருத்துவராகவும், அமெரிக்க விண்வெளிப் படையின் கர்னலாகவும் பணியாற்றி வருகிறார். கசகஸ்தானில் உள்ள பைகோனூர் ஏவுதளத்தில் இருந்து, ரஷ்யாவின் 'சோயுஸ் எம்.எஸ் 29' (Soyuz MS-29) விண்கலம் மூலம் எக்ஸ்பெடிஷன் 75 திட்டத்தின் கீழ் மூன்று பேரைக் கொண்ட குழுவினர் விண்வெளிக்குச் செல்லவுள்ளனர். ரஷ்யாவின் ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளான பியோட்டர் டுப்ரோவ், அன்னா கிகினா ஆகிய இருவரும் இவருடன் பயணிக்கின்றனர். இந்த விண்வெளித் திட்டம் மொத்தம் எட்டு மாதங்கள் கொண்டதாகும். கேரளத்தை பூர்வீகமாகக்கொண்ட அனில் மேனன் டாக்டர் அனில் மேனன் 2014-ம் ஆண்டு நாசாவில் ஃப்ளைட் சர்ஜனாக தனது பணியைத் தொடங்கினார். அவசரக்கால மருத்துவ நிபுணரான இவர், விண்வெளி வீரர்களின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்தார். இவர் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியரும் ஆவார். 2018-ம் ஆண்டு ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலத்தை பூர்வீகமாகக் கொண்ட அனில் மேனன், பிரபல சுதந்திரப் போராட்ட வீரரும் அரசியல் தலைவருமான சேற்றூர் சர் சங்கரன் நாயரின் கொள்ளுப் பேரன் ஆவார். இவருடைய தந்தை சங்கரன் மேனன் மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்றார். அங்கு உக்ரைனைச் சேர்ந்த எலிசபெத் சமோலென்கோ என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் அனில் பிறந்தார். அனிலின் மனைவி அன்னா மேனனும் ஒரு விண்வெளி வீரர் ஆவார். அன்னா மேனன் கடந்த 2024 செப்டம்பரில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் போலாரிஸ் டான் என்ற தனியார் விண்வெளித் திட்டத்தின் மூலம் ஐந்து நாட்கள் புவி வட்டப்பாதையில் பயணித்துள்ளார். விண்வெளிக்குச் செல்ல உள்ள அனில் மேனன் உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் விண்வெளி வாழ்க்கை மனித உடலில் ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்த அறிவியல் பூர்வமான ஆராய்ச்சிகளுக்கு டாக்டர் அனில் மேனன் தலைமை தாங்குவார். மனித உடலில் இரத்த ஓட்டம், நரம்புகளின் அமைப்பு மற்றும் புவிஈர்ப்பு விசை இல்லாத சூழலில் இரத்தத்தின் கூறுகளில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை இவருடைய முக்கிய ஆராய்ச்சியாக இருக்கும். மேலும், சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள குடிநீர் அமைப்பைப் பயன்படுத்தி, நரம்பு வழிச் செலுத்தப்படும் மருத்துவத் திரவங்களை தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தையும் இவர் இந்த பயணத்தின் போது சோதித்துப் பார்க்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டாக்டர் அனில் மேனன் மற்றும் அன்னா மேனன் தம்பதியினர் விண்வெளித் துறை வரலாற்றிலேயே மிகவும் குறிப்பிடத்தக்க தம்பதியராக வலம் வருவது பெருமைக்குரிய விஷயமாகும். அனில் மேனனின் விண்வெளிப் பயணத்தை கேரள மக்கள் கொண்டாடி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/science/from-kerala-base-scientists-flying-to-space-from-nasa




