சென்னை, சட்டசபையில் இன்று 6 துறைகள் மீது மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. முதல்-அமைச்சர் விஜய்யின் துறையும் இடம்பெற்றுள்ளதால் எதிர்பார்ப்பு நிலவுகிறது. பட்ஜெட் மீதான விவாதம் தமிழக சட்டசபையில் கடந்த 5-ந் தேதி 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், 6-ந் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 7, 10, 11 ஆகிய தேதிகளில் 3 நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. கடந்த 12-ந் தேதி நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண் துறை அமைச்சர் வினோத் ஆகியோரின் பதிலுரையுடன் பட்ஜெட் மீதான விவாதம் நிறைவடைந்தது. மானியக் கோரிக்கை விவாதம் சுதந்திர தினத்தை முன்னிட்டு, அடுத்த 4 நாட்கள் சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், கடந்த 17-ந் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இதுவரை 18 துறைகள் மீது மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றுள்ளது. கடந்த 2 நாட்கள் (22, 23-ந் தேதி) சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால், சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. முதல்-அமைச்சர் விஜய்யின் துறை இந்த நிலையில், தமிழக சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. முதலில் பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. தீர்மானத்தை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் வாசித்தார். கோடிக்கணக்கான மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம்பிடித்தவர் என்றும் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் எனவும் புகழஞ்சலி செலுத்தப்பட்டது. இரங்கல் தீர்மானம் வாசித்தவுடன் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் 2 மணி துளிகள் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் விஜய் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தில முதற்கட்டமாக ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும். இந்த திட்டம் பொங்கல் பண்டிகை முதல் செயல்பாட்டுக்கு வரும். ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு சிலிண்டர் வழங்கப்படும். எரிவாயு சிலிண்டருக்கான விலை நேரடியாக பயனாளியின் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று அறிவித்தார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, பள்ளிக் கல்வித் துறை, தமிழ் வளர்ச்சித் துறை, உயர் கல்வித் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகிறார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சரும், முதல்-அமைச்சருமான ஜோசப் விஜய், செய்தி மற்றும் விளம்பரம், பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், உயர் கல்வித் தறை அமைச்சர் விஸ்வநாதன் ஆகியோர் பேசுகிறார்கள். நிறைவாக, தங்கள் துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர்கள் வெளியிட இருக்கின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/debate-on-demands-for-grants-for-six-departments-in-the-assembly-today




