லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் ரூ.70 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள கள்ள 20 ரூபாய் நாணயங்களை தயாரித்து சந்தையில் புழக்கத்தில் விட்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து மூட்டை மூட்டையாக கள்ள நாணயங்கள் மற்றும் எந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தனிப்படை விசாரணை உத்தரபிரதேச மாநிலத்தில் 20 ரூபாய் கள்ள நாணயங்கள் அதிகளவில் புழக்கத்தில் இருப்பதாக போலீசாருக்கு அடுத்தடுத்து புகார்கள் வந்தன. இதையடுத்து, கள்ள நோட்டு மற்றும் நாணயங்களை ஒழிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். போலீசாரின் விசாரணையில், ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் 5 பேரை கைது செய்தனர். அசல் நாணயம் போல தயாரிப்பு கைதான கும்பலிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாயின. இவர்கள் இரும்பு மற்றும் துத்தநாக தகடுகளில் இருந்து நாணயங்களின் அடிப்பாகங்களை உரு வார்ப்பாக செய்துள்ளனர். பின்னர், அவற்றின் மீது பித்தளையை பூசி, அதிநவீன அச்சுகள் மற்றும் எந்திரங்களை பயன்படுத்தி அசல் நாணயம் எது, போலி நாணயம் எது என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு அச்சு அசலாக வடிவமைத்துள்ளது தெரியவந்தது. நாணயங்கள் பறிமுதல் கைதானவர்களிடமிருந்து மூட்டை மூட்டையாக கள்ள 20 ரூபாய் நாணயங்கள் மற்றும் நாணயம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட 6 பெரிய எந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 5 இரும்பு அச்சுகள், 39 முத்திரையிடப்படாத அச்சுகள், 20 முத்திரையிடப்பட்ட அச்சுகள், ஒரு அச்சு மெருகூட்டும் எந்திரம், அரைக்கும் கற்கள் மற்றும் நாணயங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் பிற உபகரணங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மதுக்கடைகளில் புழக்கம் இந்த கள்ள நாணயங்களை பொதுமக்கள் மத்தியில் எளிதாக புழக்கத்தில் விடுவதற்காக இந்த கும்பல் ஒரு தந்திரத்தை கையாண்டுள்ளது. மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் மதுக்கடைகள், டோல்கேட் மற்றும் சிறு வியாபாரிகள் மூலமாக இந்த நாணயங்களை சந்தையில் புழக்கத்தில் விட்டுள்ளனர். ரூ.70 கோடிக்கு மோசடி இந்த கும்பலின் தலைவன் பஞ்சாப் மாநிலம் மொஹாலியை சேர்ந்த உப்கர் லூத்ரா (என்ற) அபய் பிரதாப் சிங் என்பது தெரியவந்தது. இவர் கடந்த 2001-ம் ஆண்டு முதல் அதாவது சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கள்ள நாணய தொழிலில் ஈடுபட்டு வருவது அம்பலமாகியுள்ளது. கைதான இந்த கும்பல் இதுவரை ரூ.70 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள கள்ள நாணயங்களை தயாரித்து சந்தையில் புழக்கத்தில் விட்டதாக போலீஸ் விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/uttar-pradesh-gang-that-circulated-rs-70-crore-in-counterfeit-coins-busted




