காவல்துறை மானியக் கோரிக்கை குறித்து நடைபெற்ற விவாதத்திற்குக் கடந்த திங்கட்கிழமை முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் பதிலுரை அளித்திருந்தார். சட்டமன்றத்தில் அவர் பேசும்போது வெளிப்படுத்திய உடல்மொழியை அரசியல் தலைவர்கள் பலரும் விமர்சித்திருந்தனர். இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் இச்செயல், கண்ணியமான அணுகுமுறை இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். திருமாவளவன் அறிக்கையில் திருமா, "காவல்துறை மானியத்தில் மாண்புமிகு முதல்வர் ஆற்றிய பதிலுரையின்போது, திமுக தலைவரும் மேனாள் முதல்வருமான தளபதி ஸ்டாலின் அவர்களைக் கேலி செய்யும் வகையில் அவரது உடல்மொழி அமைந்திருந்ததாகக் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், முதல்வர் தரப்பில் 'அது உள்நோக்கம் கொண்டதல்ல' என்று விளக்கம் சொல்லப்பட்டிருக்கிறது. எனினும், இதுபோன்ற 'உடல்மொழிகள்' கண்ணியமான அணுகுமுறை இல்லை என்பதையும் மனித மாண்புகளுக்கு எதிரானது என்பதையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சுட்டிக்காட்டுகிறோம். எந்தவொரு சூழலிலும் ஒருவரின் 'தன்மதிப்பைக்' குறைத்து மதிப்பிடுவதோ, காயப்படுத்துவதோ நாகரிகம் ஆகாது. தனிநபர் ஒருவரின் மீதான அரசியல் விமர்சனங்கள் என்பது வேறு. தனிப்பட்ட முறையில் ஒருவரின் தன்மதிப்பைக் காயப்படுத்தும் விமர்சனங்கள் என்பது வேறு. கல்வி, பொருளாதாரம், அதிகாரம் போன்ற வலிமையில்லாத எளிய மனிதரையும்கூட காயப்படுத்தும் அணுகுமுறை ஒருபோதும் ஏற்புடையதில்லை. அகவையில் மூத்தோரை மதிப்பது மனித மாண்புகளில் மிகவும் உயர்ந்ததாகும். எனவே, மாண்பு நிறைந்த ஒரு மகத்தான பொறுப்பிலுள்ள முதலமைச்சர் இனிவரும் காலத்தில் தனது உடல்மொழியில் மிகுந்த கவனத்துடன் இருத்தல் நலம் பயப்பதாகும். முதல்வரின் உடல்மொழி: ___________________ மனித மாண்புகளுக்கு எதிரானதாகும்! _______________________________ காவல்துறை மானியத்தில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் ஆற்றிய பதிலுரையின்போது, திமுக தலைவரும் மேனாள் முதல்வருமான தளபதி ஸ்டாலின் அவர்களைக் கேலி செய்யும் வகையில் அவரது உடல்மொழி… — Thol. Thirumavalavan (@thirumaofficial) September 9, 2026 முதல்வரின் பதிலுரையையொட்டி அடுத்த நாள் திமுக தரப்பில் முதல்வரின் உரையில் சில பகுதிகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த விவாதத்தின் போது இடைமறித்துச் சட்டத்துறை அமைச்சர் கூறிய கருத்து வரலாற்றுப் பிழையாகும். மிசா காலத்து அரசப் பயங்கரவாதம் எத்தகையது என்பது நாடறிந்த ஒன்றாகும். அந்தக் கொடிய ஒடுக்குமுறைக்குள்ளான திமுக தலைவர் குறித்து முற்றிலும் தவறான கருத்தினைப் பதிவு செய்தது கண்டனத்துக்குரியதாகும். மாண்புமிகு அமைச்சர் அதனைத் திரும்பப் பெறுவதாக அறிவிக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/government-and-politics/governance/thirumavalavan-criticizes-vck-vijay-assembly-speech-mk-stalin




