நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ் குறித்து பேசியுள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் சமீபத்தில் மறைந்த இயக்குனர்கள் பாரதிராஜா, பாக்யராஜ் ஆகியோருக்கு ‘ராஜகோபுரங்கள்’ என்ற தலைப்பில் நினைவஞ்சலி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். நிகழ்ச்சியில், பாரதிராஜா மற்றும் பாக்யராஜின் நினைவுச் சிலைகள் திறந்து வைக்கப்பட்டன. இயக்குநர் சங்கத் தலைவர் ஆர்.கே செல்வமணி, தயாரிப்பாளர் தமிழ்க் குமரன், சித்ரா லட்சுமணன், நடிகர் நாசர், இயக்குனர் பாண்டியராஜன், நடிகர் பார்த்திபன் ஆகியோர் இந்த விழாவை ஒருங்கிணைத்திருந்தனர். தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் ராஜ்மோகன், வன்னி அரசு, முகமது பர்வேஸ், முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, முன்னாள் துணை முதல்வரும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் சசிகலா உள்ளிட்டோர் பங்கேற்று பாரதிராஜா- பாக்யராஜ் ஆகியோரது பெருமைகளையும் சாதனைகளையும் நினைவுகூர்ந்தனர். நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “பாரதிராஜாவும் பாக்யராஜும் கடவுளின் குழந்தைகள். அவர்கள் தங்கள் திறமையால்தான் முன்னேறினார்கள் என்றால் நம்ப மாட்டேன். திறமையால் உழைக்கப் பலர் தயாராக இருந்தாலும் எல்லாருக்கும் அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. அதற்கு சந்தர்ப்பம் அமைய வேண்டும். அந்த வாய்ப்பை கடவுள்தான் அளிப்பார். கேமராவை கிராமங்களுக்கு எடுத்துச் சென்றவர் இயக்குநர் பாரதிராஜா. அங்கு சென்று சாதாரண கதாபாத்திரங்களை எழுதி, வெற்றி கண்டார். எல்லாரும் செல்லும் வழியில் சென்றால் வெற்றி பெற முடியாது. நாம் புதிதாக அல்லது வித்தியாசமாக ஒன்றைச் செய்யும் போதுதான் வெற்றி பெற முடியும். பாரதிராஜா அப்படிப்பட்டவர். பாரதிராஜாவின் ‘முதல் மரியாதை’ எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம். அதேபோல் இயக்குநர் பாக்யராஜ். அவர் சினிமாவில் 50 ஆம் ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக எடுக்கப்பட்ட விழாவில் கலந்துகொண்டு தங்கச் சங்கிலி ஒன்றைப் பரிசளித்தேன். அதனை இறுதி வரை பாக்யராஜ் அணிந்திருந்ததாக பூர்ணிமா சொன்னார். அதைக் கேட்டும் மிகவும் சந்தோஷப்பட்டேன். பாக்யராஜிடம் ஒரு கதையைச் சொன்னால் அதனை உள்வாங்கிக் கொண்டு, எப்படியெல்லாம் எடுக்கலாம் என்பதையே சிந்தித்துக் கொண்டிருப்பார். அதனால்தான் அவர் திரைக்கதை மன்னர்” என தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/bharathiraja-and-bhagyaraj-are-sent-by-god-rajinikanth




