மது பழக்கத்தால் சீரழியும் இளைஞர்களின் எதிர்காலத்தைக் காக்கவும், பொது அமைதியைப் காக்கும் நோக்கோடும், நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி அருகேயுள்ள விழுந்தமாவடி மீனவ கிராமம் மது ஒழிப்புக்கு எதிராக ஒரு முன்மாதிரியான அதிரடி நடவடிக்கையைக் கையில் எடுத்துள்ளது. "மதுவை ஒழிப்போம், மக்களைக் காப்போம்!" என்ற முழக்கத்துடன் ஊர் பஞ்சாயத்து சார்பில் வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு பேனர் தற்போது அப்பகுதியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. கிராமத்தின் சுகாதாரம் மற்றும் அமைதியைக் கருத்தில் கொண்டு, திருமணம் ஆகாத இளைஞர்கள் மது அருந்த முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளதோடு. இதை மீறினால் ரூ.5,000 அபராதம் வசூலிக்கப்படும் என்றும் ஊர் மக்கள் ஒன்று கூடி அறிவித்து உள்ளனர். மேலும் திருமணமானவர்கள் குடித்துவிட்டு வீட்டிலோ அல்லது பொது இடங்களிலோ தகராறு செய்து புகார் வந்தால், அவர்களுக்கும் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் மது அருந்துபவர்கள் குறித்து ஊர் தலைவர்களிடம் ஆதாரம் தரும் நபர்களுக்கு ரூ.2,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்து கடந்த 10 நாள்களாக கிராமத்தில் குடும்பச் சண்டைகள் இன்றி அமைதி நிலவுவதாக ஊர் மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். மது ஒழிப்புக்கு எதிராக இக்கிராமத்தின் முயற்சியை தமிழகத்திற்கே முன்மாதிரியான நடவடிக்கை எனப் பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டி வரும் நிலையில், ஊர் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் சுரேஷிடம் பேசினோம். ``ஊரில் யாரும் மது அருந்தக் கூடாது என்ற நோக்கோடு இந்த மதுவுக்கு எதிரான அறிவிப்பு பலகையை எங்கள் ஊரில் வைத்துள்ளோம். தொடர்ந்து மதுவினால் நாட்டில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய குடும்பங்களில் வாழ்வாதாரம் அதிக அளவில் பாதிக்கப்படுகிறது. எனவே இந்த மது என்கிற தீய சக்தியினால் எங்கள் கிராமத்தில் எந்த ஒரு குடும்பமும் சீரழிந்து விடக் கூடாது என்கிற நோக்கோடு இந்த நடவடிக்கையை நாங்கள் முன்னெடுத்திருக்கிறோம். இந்த அறிவிப்பு பலகை வைத்து 10 நாள்கள் ஆகின்றன. எங்கள் ஊரில் மது குடிப்பது தற்போது முற்றிலுமாக குறைந்து இருக்கிறது. மேலும், ஊர் கட்டுப்பாடு பயத்தினால், எங்கள் இளைஞர்கள் மது அருந்துவதில் கவனம் செலுத்தாமல் மற்ற நிகழ்வுகளில் கவனம் செலுத்துகிறார்கள். மக்களும் மிக அமைதியான ஒரு வாழ்க்கையை வாழத் தொடங்கியிருக்கின்றனர். எங்கள் ஊரைப் பின்பற்றி தமிழ்நாடு முழுவதும் நிறைய கிராமங்கள் இது போன்ற முன்னெடுப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்" என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/government-and-politics/for-option-3-village-anti-alcohol-initiative-imposes-5000-fine-liquor-consumption




