புதுடெல்லி, 'நீட்' வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகவும், 'நீட்' தேர்வு தோல்வி காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்தது போன்றவற்றுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 20-ந்தேதி முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கிடையில், கடந்த 20-ந்தேதி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தினர். இந்த பேரணியில் நாடு முழுவதும் இருந்து பல ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்றனர். இவர்களை தடுக்க பல இடங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டன. ஆனாலும் கூட்டம் கட்டுப்படுத்த முடியாதபடி இருந்ததால் தடியடியும், கண்ணீர் புகைக்குண்டுகளும் வீசப்பட்டன. பதிலுக்கு போலீசார் மீது கல்வீச்சும் நடந்ததாக கூறப்படுகிறது. போலீசார் நடத்திய தடியடியில் பல இளைஞர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் நாடாளுமன்றம் அருகே உள்ள ஆர்.எம்.எஸ். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்களும், இளைஞர்களும் தாக்கப்பட்ட இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அனைத்து எதிர்க்கட்சிகளும் இதனை பெரிதாக எடுத்தன. காங்கிரஸ் கட்சியும் மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தை தொடங்கியுள்ளது. நாடு முழுவதிலும் இருந்து டெல்லியில் இளைஞர்கள் குவிந்து வருவதால், தலைநகரில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனிடையே, டெல்லியில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவாகவும், மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடிக்கு எதிராகவும் அரசியல், சினிமா மற்றும் விளையாட்டுத்துறையைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில், பாலிவுட் திரையுலகில் இருந்து முதல் முறையாக முன்னணி நட்சத்திர நடிகர் சல்மான் கான், மாணவர்களின் போராட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- “ஒரு அமைதியான போராட்டம் வன்முறையாக மாறியது மிகுந்த வருத்தமளிக்கிறது. இதில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். வினாத்தாள் கசிவு என்பது மிக முக்கியமான ஒரு பிரச்சனை. சிறந்த கல்வி முறைக்காக நம் நாட்டு மாணவர்கள் ஒன்றிணைந்து செயல்படுவதையும், அதற்கு அவர்களது பெற்றோர்கள் ஆதரவளிப்பதையும் காண்பது மகிழ்ச்சியளிக்கிறது. கடினமாக படித்து தங்கள் எதிர்காலத்தையும், சிறந்த, கல்வியறிவு மிக்க இந்தியாவையும் உருவாக்க வேண்டும் என்ற அர்ப்பணிப்பு, நேர்மை மற்றும் ஆர்வத்துடன் மாணவர்கள் எடுத்துள்ள இந்த நிலைப்பாட்டை நான் மனதார பாராட்டுகிறேன். இந்தப் போராட்டம் சரியான அணுகுமுறை; மாணவர்கள் இதை அமைதியான முறையில் முன்னெடுத்துள்ளனர். இது மிகுந்த துணிச்சலையும், வீரத்தையும் வெளிப்படுத்துகிறது. கல்வியின் மீது மிகுந்த ஆர்வமும், உத்வேகமும் கொண்ட இந்த தலைமுறை இந்தியாவிற்குப் பெருமை சேர்க்கும். இது மாணவர்களுக்கும், கல்வி முறைக்கும் இடையிலான ஒரு விவகாரம். இதை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்திக்கொள்ளக் கூடாது. இதற்கான முழு பெருமையும் நம் நாட்டு மாணவர்களையே சாரும். அரசாங்கமும் அவர்களுக்குத் தேவையான ஆதரவை அளித்து, கல்வி முறையை மேலும் வலுப்படுத்தும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இது இரு தரப்புக்கும் நன்மை பயக்கும் ஒரு சூழல். ஒரு நல்ல முடிவுக்காக நான் நம்பிக்கையுடனும், பிரார்த்தனையுடனும் காத்திருக்கிறேன். கல்வி கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் இறைவனின் ஆசி கிடைக்கட்டும். கல்வி என்பது அடுத்தகட்ட டிரெண்டாகவும், கலாசாரமாகவும் மாற வேண்டும். அது ஆண்டுதோறும் மேலும் பிரபலமடைய வேண்டும். எந்தளவுக்கு என்றால், வெளிநாட்டினர் கல்வி பயில இந்தியாவிற்கு வரும் நிலையை, இந்தியா ஒரு முக்கியக் கல்வி மையமாகத் திகழும் நிலையை நாம் உருவாக வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/student-protests-intensify-in-delhi-bollywood-star-salman-khan-extends-support




