சென்னை, குறைந்த விலைக்கு தங்க காசுகள் தருவதாகக் கூறி, சக காவல்துறையினர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோரை ஏமாற்றி ரூ. 20 கோடிக்கும் மேல் மோசடி செய்த வழக்கில், ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆய்வாளர் ஷீலா மேரியை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். தங்க காசு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஷீலா மேரி திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றினார். அப்போது, அவரது ஓட்டுநரான பிரபு மணி என்பவருடன் இணைந்து, "குறைந்த விலைக்கு தங்கக்காசு தருகிறோம்" என ஆசைவார்த்தை கூறி காவலர்களிடம் பணம் வசூலித்துள்ளார். கொடுங்கையூர் பகுதியில் அலுவலகம் நடத்தி வந்த பிரபு மணியை நம்பி, தொடக்கத்தில் சிறிய தொகையை கொடுத்து தங்க காசு வாங்கிய போலீசார், பின்னர் பெரிய அளவில் வாங்க முடிவு செய்துள்ளனர். பெரிய தொகையாக கோடிக்கணக்கில் பணத்தை பெற்றுக்கொண்ட பிரபு மணி, கூறியபடி தங்க காசுகளையும் தராமல், வாங்கிய பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டு தலைமறைவானார். இந்த மோசடி திட்டத்திற்கு பெண் ஆய்வாளர் ஷீலா மேரி உடந்தையாக இருந்ததும், அதற்கு அவருக்கு குறிப்பிட்ட தொகை கமிஷனாக வழங்கப்பட்டதும் தெரியவந்தது. பாதிக்கப்பட்ட காவல்துறையினர் இது குறித்து பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். கைது இந்த புகாரின் அடிப்படையில், மோசடிக்கு உடந்தையாக இருந்த பிரபு மணியை போலீசார் ஏற்கனவே கைது செய்திருந்தனர். மேலும், ரூ. 20 கோடிக்கும் மேல் மோசடி செய்ய உதவிய குற்றத்திற்காக, ராயபுரம் பெண் காவல் ஆய்வாளர் ஷீலா மேரியை கடந்த ஜூன் 15-ஆம் தேதி வடக்கு மண்டல காவல் இணை ஆணையர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். ஷீலா மேரி நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். எனினும், அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில், நேற்று இரவு சென்னையில் வைத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவரை அதிரடியாகக் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/gold-coin-fraud-case-female-inspector-sheila-mary-arrested-after-being-suspended




