சென்னை, பெருநகர சென்னை மாநகராட்சியில் சொத்து உரிமையாளர்களிடமிருந்து நிலுவை சொத்து வரி வசூலிப்பதற்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு முகாமில் 03.07.2026 முதல் 16.07.2026 வரை ரூ.103.03 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- “பெருநகர சென்னை மாநகராட்சியின் பிரதான வரி வருவாயாக சொத்துவரி உள்ளது. இதன் மூலமே, சென்னை மாநகருக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்புகள், குப்பை திடக்கழிவுகள் அகற்றுதல், தெரு விளக்குகள், பூங்காக்கள் மற்றும் சாலைகள் பராமரித்தல், பொது சுகாதாரம் நோய்த்தடுப்புப் பணி போன்ற அத்தியாவசியப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மொத்தம் உள்ள 14,23,653 சொத்து உரிமையாளர்களில், 7,10,285 எண்ணிக்கையிலான சொத்து உரிமையாளர்கள் நிலுவையின்றி சொத்துவரி செலுத்தியுள்ளனர். மீதமுள்ள 7,13,3637 சொத்து உரிமையாளர்களிடம் இருந்து ரூ.969.56 கோடி வசூலிக்கப்பட வேண்டும். பெருநகர சென்னை மாநகராட்சியில் சொத்து வரி வசூலிப்பதற்கான சிறப்பு முகாம் 03.07.2026 முதல் தொடங்கி 31.07.2026 வரை நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து, 03.07.2026 முதல் நடைபெற்று வரும் சிறப்பு முகாம்களில் சொத்து உரிமையாளர்கள் தாமாக முன்வந்து, நிலுவை மற்றும் நடப்பு சொத்துவரி செலுத்தியதன் காரணமாக 03.07.2026 முதல் 16.07.2026 வரையிலான காலத்தில், ரூ.103.03 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் ஒப்பீடுகையில், வசூல் திறன் 145 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஜுலை மாதம் இறுதி வரை நடைபெறும் இந்த சிறப்பு முகாமில் சிறப்பு தீவிர வசூல் (Special Intensive Collection) பணி மேற்கொள்ளப்படும். பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரியை, சொத்துவரி உரிமையாளர்கள், இணையதளம், கைபேசி செயலி, கட்செவ்வி சேவை, சென்னை மாநகராட்சி கைபேசி செயலி ஆகியவற்றின் மூலமும் மற்றும் வரிவசூலிப்பாளர்கள் மூலமும் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியால் மண்டலங்கள்/வார்டுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு முகாம்களிலும், காலை 8.00 மணி முதல் மாலை 6.00 வரையிலும், தங்களது நிலுவை சொத்துவரித் தொகையினை செலுத்தி, தனிவட்டி விதிப்பினை தவிர்க்குமாறும், பெருநகர சென்னை மாநகராட்சி அத்தியாவசிய சேவைப்பணிகளுக்கு நல்ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/special-camp-for-collecting-property-tax-arrears-in-chennai-corporation-rs-10303-crore-collected




