சென்னை, சென்னை குன்றத்தூர் அருகே திருமுடிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பு என்ற தமிழ் அழகு. இவர் காவல்துறையின் ‘ஏ’ (A) கேட்டகிரி பட்டியலில் உள்ள ரவுடி ஆவார். இவர் மீது கொலை வழக்குகள் இரண்டு உட்பட மொத்தம் 19 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. பொதுமக்களை மிரட்டுவது, கட்டப்பஞ்சாயத்து செய்வது மற்றும் கொலை மிரட்டல் விடுத்தது போன்ற பல்வேறு குற்றச் செயல்களில் இவர் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், குன்றத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரிக்கு பின்புறம் உள்ள காலி மைதானத்தில், ரவுடி கருப்பு கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக திருமுடிவாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரை சுற்றி வளைத்தனர். அப்போது, ரவுடி கருப்பு மற்றும் ஓட்டேரி பகுதியை சேர்ந்த ஆகாஷ் என்கின்ற சூர்யா இருவரும் நாட்டு வெடிகுண்டுகளைத் தயாரித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. போலீசாரைக் கண்டதும், தான் தயாரித்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகளை அவர்கள் மீது வீச ரவுடி கருப்பு முயற்சி செய்துள்ளார். மேலும் சுற்றி வளைக்க முயன்றபோது தலைமை காவலர் விஜயகுமாரை வலது முழங்கையில் வெட்டி விட்டு தப்ப முயன்றுள்ளார். உடனே சுதாரித்துக் கொண்ட காவல் ஆய்வாளர் ரவுடியின் வலது கணுக்காலில் சுட்டார். இதில் காயமடைந்த ரவுடி அங்கேயே கீழே விழுந்தார். தொடர்ந்து அவரை போலீசார் பிடித்து கைது செய்தனர். துப்பாக்கி சூட்டில் காயமடைந்த ரவுடி கருப்பு தாம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். காயமடந்த தலைமை காவலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளார். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னையில் ரவுடி துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/rowdy-arrested-with-gun-in-chennai




