வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் இந்திய மருத்துவ வரலாற்றில் பெண்களுக்கு வழிகாட்டிய முன்னோடிகளில் மிகச் சிறப்பான இடத்தைப் பெற்றவர் டாக்டர்.மேரி பூனன் லூக்கோஸ். மேரி பூனன் லூக்கோஸ் 1886-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 அன்று அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள அய்மணம் கிராமத்தில் செல்வச் செழிப்பான சிரியக் கிறித்தவக் குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை டாக்டர்.டி.ஈ.பூனன், திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் முதல் மருத்துவப் பட்டதாரியும் அரச குடும்பத்தின் முதன்மை மருத்துவருமாவார். ஸ்காட்லாந்தின் அபர்தீன் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்ற அவர், மகளின் கல்வி மற்றும் எதிர்காலத்திற்கு மிகுந்த ஆதரவாக இருந்தார். மேரியின் தாயாரின் பெயர் பொதுவாகக் கிடைக்கும் வரலாற்றுப் பதிவுகளில் குறிப்பிடப்படவில்லை. அவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாக மட்டுமே சில குறிப்புகள் தெரிவிக்கின்றன. மேரி தனது பெற்றோருக்கு ஒரே பெண் குழந்தை; அவருக்கு உடன்பிறந்தோர் எவரும் இல்லை. சிறு வயதில் தந்தையின் வழிகாட்டுதலிலும், பிரிட்டிஷ் பெண் ஆசிரியைகளின் பராமரிப்பிலும் வளர்ந்தார். திருவனந்தபுரம் ஹோலி ஏஞ்சல்ஸ் கான்வென்ட் பள்ளியில் பள்ளிக் கல்வியை முடித்த மேரி, இறுதித் தேர்வில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கமும் வென்றார். தந்தையைப் போலவே மருத்துவராக வேண்டும் என்ற கனவு அவருக்குள் வலுவாக இருந்தது. ஆனால், திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் அறிவியல் படிக்க விண்ணப்பித்தபோது, பெண் என்பதற்காக அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதே கல்லூரியில் வரலாறு மற்றும் பொருளாதாரம் பயின்ற அவர், அக்கல்லூரியின் ஒரே பெண் மாணவியாக விளங்கினார். 1909-ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் கலை பிரிவில் பட்டம் பெற்ற முதல் பெண் மாணவியாக வரலாறு படைத்தார். இந்தியாவில் மருத்துவக் கல்விக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதால், தந்தையின் ஆதரவுடன் பிரிட்டன் செல்ல முடிவு செய்தார். 1909-ஆம் ஆண்டு கொழும்பிலிருந்து கப்பலில் பயணித்து பிரிட்டன் சென்றார். லண்டன் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்ற அவர், அங்கு மருத்துவப் படிப்பில் சேர்ந்த முதல் இந்தியப் பெண் மாணவியாகக் குறிப்பிடப்படுகிறார். மருத்துவப் பட்டம் பெற்ற பின்னர், அயர்லாந்தின் டப்ளினில் உள்ள ரோட்டுண்டா மருத்துவமனையில் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத்தில் மேற்பயிற்சி பெற்றார். லண்டனிலுள்ள கிரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட் குழந்தைகள் மருத்துவமனையில் குழந்தை மருத்துவப் பயிற்சியும் பெற்றார். மருத்துவக் கல்வியுடன் இசையிலும் ஆர்வம் கொண்ட அவர், தனது பதினெட்டாவது வயதிலேயே லண்டன் இசைத் தேர்வில் தேர்ச்சி பெற்று பியானோ இசையிலும் சிறந்து விளங்கினார். 1916-ஆம் ஆண்டு இந்தியா திரும்பியபோது முதல் உலகப்போர் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. கடலில் போர்க்கப்பல்களின் தாக்குதலைத் தவிர்ப்பதற்காக ராணுவ கப்பல் போல் வடிவமைக்கப்பட்ட பயணிகள் கப்பலில் ஆபத்தான கடற்பயணத்தை மேற்கொண்டார். இந்தியா வந்து சேருவதற்கு சில நாட்களுக்கு முன்பே, அவருக்கு மிகப்பெரும் ஆதரவாக இருந்த தந்தை திடீரென மறைந்தார். தந்தையின் மறைவுத் துயரத்துடனேயே மேரி தனது மருத்துவப் பணியைத் தொடங்கினார். திருவனந்தபுரத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் மகளிர் மருத்துவம் மற்றும் மகப்பேறு மருத்துவ நிபுணராகப் பணியாற்றினார். பின்னர் திருவிதாங்கூர் அரச குடும்பத்தின் முதன்மை மருத்துவராக நியமிக்கப்பட்டு, அரச குடும்பப் பெண்களின் பிரசவங்களை கவனித்தார். 1920-ஆம் ஆண்டு, ஏற்கனவே மூன்று குழந்தைகளை இழந்த ‘மேரி’ என்ற பெண்ணுக்கு சிசேரியன் அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டார். மின்சார வசதிகூட இல்லாத காலத்தில் மண்ணெண்ணெய் விளக்கின் வெளிச்சத்தில் நடைபெற்ற இந்த அறுவைச் சிகிச்சை மருத்துவ வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமைந்தது. பயிற்சி பெறாத பாரம்பரியப் பிரசவ உதவியாளர்களால் பிரசவங்கள் நடத்தப்பட்டதால் தாய், சேய் இறப்புகள் அதிகமாக இருந்த அக்காலத்தில், மேரி பூனன் லூக்கோஸ் அப்பெண்களைத் தேர்ந்தெடுத்து இரண்டு ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு அறிவியல் அடிப்படையிலான பிரசவப் பயிற்சி, கிராமப்புறங்களில் பாதுகாப்பான மகப்பேறு சேவைக்கு வழிவகுத்தார். காசநோய் அச்சுறுத்தலாக இருந்த காலத்தில் நாகர்கோவிலில் காசநோய் சிகிச்சை நிலையத்தை நிறுவினார். திருவனந்தபுரத்தில் எக்ஸ்-கதிர் மற்றும் ரேடியம் மருத்துவ நிறுவனத்தைத் தொடங்கி, புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கான நவீன சிகிச்சை முறைகளை அறிமுகப்படுத்தினார். 1924-ஆம் ஆண்டு திருவிதாங்கூர் சுகாதாரத் துறையின் தலைவராக நியமிக்கப்பட்டார். 1938-ஆம் ஆண்டு திருவிதாங்கூரின் தலைமை அறுவைச் சிகிச்சை நிபுணராக உயர்ந்தார். இதன் மூலம் உலகின் முதல் பெண் சர்ஜன் ஜெனரல் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். 1922-ஆம் ஆண்டு திருவிதாங்கூர் சட்டமன்றக் கவுன்சிலின் முதல் பெண் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். சுகாதாரம், தடுப்பூசி, பெண்கல்வி ஆகியவற்றுக்காக சட்டமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்தார். பெரியம்மை போன்ற கொடிய நோய்கள் பரவியபோது மக்கள் தடுப்பூசி போட அஞ்சிய நிலையில், கட்டாயத் தடுப்பூசி சட்டத்திற்காக அவர் தீவிரமாக வாதிட்டார். மூடநம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடி, அறிவியல் மருத்துவத்தின் தேவையை மக்களிடம் எடுத்துரைத்தார். 1917-ஆம் ஆண்டு வழக்கறிஞர் கே.கே.லூக்கோஸைத் திருமணம் செய்தார். அவர் பின்னர் திருவிதாங்கூர் உயர் நீதிமன்ற நீதிபதியாக உயர்ந்தார். இவர்களுக்கு கிரேஸ் லூக்கோஸ் என்ற மகளும் கே.பி.லூக்கோஸ் என்ற மகனும் பிறந்தனர். மகள் மருத்துவம் பயின்று பிரிட்டனில் எஃப்.ஆர்.சி.எஸ். தகுதி பெற்று, புதுதில்லி லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியில் அறுவைச் சிகிச்சைப் பிரிவில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றினார். மகன் இந்திய வெளியுறவுத் துறையில் தூதராகவும், ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியாகவும், பணியாற்றினார். வாழ்க்கையின் பிற்பகுதியில் மேரி பெரும் குடும்பத் துயரங்களைச் சந்தித்தார். 1947-ஆம் ஆண்டு அவரது கணவரும், 1954-ஆம் ஆண்டு அவரது மகளும் உயிரிழந்தனர். அதன்பின் அவரது மகனும் மறைந்தார். கணவரையும் இரு பிள்ளைகளையும் இழந்தபோதும், அவர் மனம் தளரவில்லை. ஒய்.எம்.சி.ஏ., இந்தியச் செஞ்சிலுவைச் சங்கம், ஒய்.டபிள்யூ.சி.ஏ., பெண் சாரணர் இயக்கம், இந்திய மருத்துவச் சங்கம் போன்ற அமைப்புகளில் தொடர்ந்து பணியாற்றினார். தந்தையின் நினைவாக திருவனந்தபுரம் ஒய்.எம்.சி.ஏ. அமைப்பிற்கு பெரும் தொகையை நன்கொடையாக வழங்கியதுடன், ஏழை மக்களின் மருத்துவ உதவிக்காகத் தனது குடும்பச் சொத்துக்களையும் பயன்படுத்தினார். திருவிதாங்கூர் மகாராஜா சித்திரத் திருநாள் அவருக்கு “வைத்திய சாஸ்திர குசலா” என்ற உயரிய பட்டத்தை வழங்கினார். அவரது மருத்துவ மற்றும் சமூகப் பணிகளைப் பாராட்டி இந்திய அரசு 1975-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதால் கௌரவித்தது. இறுதிக்காலத்தில் தனது வாழ்க்கை நினைவுக் குறிப்புகளை எழுதத் தொடங்கிய அவர், அவற்றை முழுமையாக நிறைவு செய்ய முடியவில்லை. பின்னர் அவை தொகுக்கப்பட்டு “டிரெயில்பிளேசர்” (முன்னோடி) என்ற பெயரில் நூலாக வெளியிடப்பட்டது. அவரது வாழ்க்கை மற்றும் சாதனைகளை மையமாகக் கொண்ட ஆவணப்படமும் பின்னர் உருவாக்கப்பட்டது. 1976-ஆம் ஆண்டு அக்டோபர் 2 அன்று தனது 90 ஆவது வயதில் டாக்டர் மேரி பூனன் லூக்கோஸ் இயற்கை எய்தினார். அவர் மறைந்தாலும், பெண்களுக்கு கல்வி மற்றும் மருத்துவத் துறையில் புதிய பாதையைத் திறந்த அவரது துணிச்சலும், மகப்பேறு மற்றும் பொது சுகாதாரத் துறையில் அவர் செய்த பணிகளும், உலகின் முதல் பெண் தலைமை அறுவைச் சிகிச்சை நிபுணராக அவர் படைத்த சாதனையும் இந்திய மருத்துவ வரலாற்றில் என்றும் அழியாத நினைவாகத் திகழ்கின்றன. வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம். இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே. Link: விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம். உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/literature/the-inspiring-legacy-of-dr-mary-poonen-lukose




