சென்னை, உலக பிசியோதெரபி தினம் செப்டம்பர் 8-ந்தேதி(நாளை) கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பிசியோதெரபி மருத்துவர்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- “உலக இயன்முறை(பிசியோதெரபி) மருத்துவ தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 8 ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினம் உலகில் உள்ள பிசியோதெரபி மருத்துவர்களால் கொண்டாடப்படுகிறது. உலக பிசியோதெரபி மருத்துவ அமைப்பு 1951 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் நாள் தொடங்கப்பட்டது. அந்த தினம் 1996 ஆம் ஆண்டு முதல், உலக இயன்முறை மருத்துவர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இருதய நோய் மற்றும் பக்கவாதம் தடுப்பில், சிகிச்சையில் மற்றும் மறுவாழ்வளித்தலில் பிசியோதெரபி மருத்துவத்தின் பங்கு என்பது தான், இந்த 2026 ஆம் ஆண்டின் பிசியோதெரபி மருத்துவ தினத்தின் கருப்பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருதய நோய் மற்றும் பக்கவாதம் தடுப்பில், சிகிச்சையில் மற்றும் மறுவாழ்வளித்தலில் இயன் முறை மருத்துவம் மற்றும் உடற்பயிற்சி மகத்தான பங்கை வகிக்கிறது. எனவே, அதனை முதன்மை படுத்தி,கருப்பொருளாகக் கொண்டு, இவ்வாண்டு பிசியோதெரபி தினம் கடைபிடிக்கப்படுவது பாராட்டுக்குரியது. இத்துறையை சார்ந்தவர்கள் மக்களிடையே பிசியோதெரபி மருத்துவத்தைப் பற்றியும் அதன் நன்மைகளையும் பற்றியும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர். மக்களுக்கு உடலியக்கம், தசைகளின் வலிமையை பாதுகாத்தல், உடல் ஆரோக்கியம், மூட்டுகளின் இயக்கம், அறிவியல் பூர்வமான உடற்பயிற்சி போன்றவற்றை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர். தசைகள், எலும்புகள் மற்றும் மூட்டு வலிகளுக்குச் சிகிச்சை அளித்தல், அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு உடல் இயக்கத்தை மீட்டெடுத்தல், பக்கவாதம் அல்லது நரம்பு மண்டல பாதிப்பு உள்ளவர்களுக்குப் பயிற்சி அளித்தல், விளையாட்டு வீரர்களின் காயங்களைச் சரிசெய்தல் போன்ற பல மருத்துவ சேவைகளை பிசியோதெரபி மருத்துவர்கள் வழங்குகின்றனர். நவீன அறிவியல் மருத்துவத்துடன் இணைந்து வளரும், செயல்படும், அதன் ஒருங்கிணைந்த முறையாக, பகுதியாக மகத்தான பங்களிப்பை செலுத்தும் பிசியோதெரபி மருத்துவச் சேவைகள் அனைத்து மக்களுக்கும் கிட்டிட வேண்டும். அதற்கேற்ப பிசியோதெரபி மருத்துவ வசதிகளை தமிழ்நாடு அரசு பரவலாக்க வேண்டும். தமிழ்நாட்டில் பிசியோதெரபி மருத்துவத்தை படித்தவர்கள் சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை இல்லாமல் உள்ளனர். அவர்களுக்கு வேலை வாய்ப்பை தமிழ்நாடு அரசு உருவாக்கி வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில், தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் பிசியோதெரபி மருத்துவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும். தனியார் துறைகளில் பணியாற்றும் பிசியோதெரபி மருத்துவர்களுக்கு ரூபாய் 7,000 முதல் 15,000 ரூபாய் வரை மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. எனவே, அவர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை நியாயமான முறையில் நிர்ணயிக்க வேண்டும். அந்த குறைந்த பட்ச ஊதியம் வழங்கப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்திட வேண்டும். உலக பிசியோதெரபி தினத்தில், சேவை மனப்பாங்கோடு செயலாற்றும் அனைத்து பிசியோதெரபி மருத்துவர்களுக்கும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறது.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/world-physiotherapy-day-greetings-from-the-communist-party-of-india




