புதுடெல்லி, 'நீட்' வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகவும், 'நீட்' தேர்வு தோல்வி காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்தது போன்றவற்றுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 20-ந்தேதி முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கிடையில், கடந்த 20-ந்தேதி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தினர். இந்த பேரணியில் நாடு முழுவதும் இருந்து பல ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்றனர். இவர்களை தடுக்க பல இடங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டன. ஆனாலும் கூட்டம் கட்டுப்படுத்த முடியாதபடி இருந்ததால் தடியடியும், கண்ணீர் புகைக்குண்டுகளும் வீசப்பட்டன. பதிலுக்கு போலீசார் மீது கல்வீச்சும் நடந்ததாக கூறப்படுகிறது. போலீசார் நடத்திய தடியடியில் பல இளைஞர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் நாடாளுமன்றம் அருகே உள்ள ஆர்.எம்.எஸ். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்களும், இளைஞர்களும் தாக்கப்பட்ட இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அனைத்து எதிர்க்கட்சிகளும் இதனை பெரிதாக எடுத்தன. காங்கிரஸ் கட்சியும் மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தை தொடங்கியுள்ளது. நாடு முழுவதிலும் இருந்து டெல்லியில் இளைஞர்கள் குவிந்து வருவதால், தலைநகரில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், டெல்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக சமூக செயற்பாட்டாளர் அன்னா ஹசாரே இன்று 2 மணி நேரம் மவுன விரத போராட்டத்தை கடைபிடித்தார். மராட்டிய மாநிலம் அஹில்யாநகரில் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை அன்னா ஹசாரே மவுன விரத போராட்டம் நடத்தினார். முன்னதாக டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின்போது மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது குறித்து பிரதமர் மோடிக்கு அன்னா ஹசாரே கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், “மாணவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறை தொடர்பான செய்திகள் வேதனை அளிக்கின்றன. இந்த போராட்டத்தை சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக பார்க்காமல், சமுதாயத்தின் வலி மற்றும் எதிர்பார்ப்புகளின் வெளிப்பாடாக பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் அதனால் அரசாங்கம் கவிழ்ந்துவிடாது. மாறாக, அது அரசாங்கத்தின் செயல்பாட்டை மேலும் பொறுப்புணர்வு மிக்கதாகவும், திறமையானதாகவும் மாற்றும். போராட்டக்காரர்களின் கருத்துகளுக்கு அரசாங்கம் பொறுமையுடன் செவிசாய்க்க வேண்டும். நம்பிக்கைக்குரிய சூழலை உருவாக்க வேண்டும். ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகளைக் காண வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/anna-hazare-observes-a-vow-of-silence-in-support-of-the-students-protest-in-delhi




