மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் மஞ்சள் மற்றும் கறுப்பு நிறத்தில், தூசி மற்றும் கழிவுகள் கலந்த நிலையில் வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் குடிநீரைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு நாள்களாக பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டிருந்ததாகவும், குடிநீரில் மஞ்சள் நிறம் கலந்திருப்பது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இன்று காலை மீண்டும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டபோது, குடிநீர் தூசி படர்ந்த நிலையில் கறுப்பு நிறத்திலும், அதிகளவில் கலங்கலாகவும் இருந்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதனால் குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டோர் இந்தக் குடிநீரை பயன்படுத்தினால் உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக அப்பகுதி பெண்கள் கவலை தெரிவித்தனர். குடிநீரைப் பயன்படுத்தும் முன்பு அதில் உள்ள கழிவுகளை அகற்றும் வகையில் சிலர் வெள்ளைத் துணிகளைப் பயன்படுத்தி தண்ணீரை வடிகட்டி பிடித்துள்ளனர். இருப்பினும், தண்ணீரில் கலந்துள்ள கழிவுகள் மற்றும் கலங்கல் முழுமையாக நீங்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர். சோழவந்தானில் சுகாதாரமற்ற குடிநீர் விநியோகம் மேலும், மேலக்கால் ஊராட்சியில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் பல மாதங்களாக முறையாக சுத்தம் செய்யப்படாமல் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். தொட்டிகளின் உட்புறம் தூசி மற்றும் அழுக்குகள் படிந்த நிலையில் இருப்பதாகவும், இதன் காரணமாகவே பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாகவும் கூறுகின்றனர். மேலக்கால் ஊராட்சியில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர், குடிநீர் விநியோகம் மற்றும் குடிநீர் தொட்டிகளை முறையாகப் பராமரிப்பதில் அலட்சியம் காட்டுவதாகவும் பொதுமக்கள் தரப்பில் ஏற்கெனவே புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. குடிநீர் தொட்டிகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் சுத்தம் செய்து, பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டிய நிலையில், உரிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். குடிநீர் என்பது பொதுமக்களின் அத்தியாவசிய தேவையாக உள்ள நிலையில், சுகாதாரமற்ற மற்றும் கலங்கலான குடிநீர் தொடர்ந்து விநியோகிக்கப்படுவது அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சோழவந்தானில் சுகாதாரமற்ற குடிநீர் விநியோகம் எனவே, மதுரை மாவட்ட நிர்வாகத்தினர் உடனடியாக மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளையும் நேரில் ஆய்வு செய்து, அவற்றின் சுகாதார நிலையை பரிசோதிக்க வேண்டும். மேலும், தொட்டிகள் சுத்தம் செய்யப்படாமல் இருந்தால் அவற்றை போர்க்கால அடிப்படையில் சுத்தம் செய்து, குடிநீரின் தரத்தை ஆய்வக பரிசோதனைக்கு உட்படுத்தி, பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், குடிநீர் விநியோகத்தில் அலட்சியம் அல்லது முறைகேடு நடைபெற்றிருப்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலாளர் மற்றும் வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் மீது உரிய துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சோழவந்தானில் சுகாதாரமற்ற குடிநீர் விநியோகம் மதுரையிலும் இதுபோன்ற தவறுகள் ஆங்காங்கே நிகழ்கிறது; ஆகையால் இதுபோன்ற தவறுகள் நிகழாமல் “சுகாதாரமான குடிநீர் வழங்குவது ஊராட்சி நிர்வாகத்தின் அடிப்படை பொறுப்பு. பொதுமக்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/government-and-politics/governance/madurai-complaint-regarding-the-supply-of-unhygienic-drinking-water-in-melakkal-panchayat-near-sholavandan




