செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சுற்றுலா வளர்ச்சிக் கழக மைதானத்தில் 5-வது சர்வதேச பட்டம் விடும் திருவிழா கடந்த 14-ந்தேதி தொடங்கியது. செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வீரப்பன், சுற்றுலாத்துறை கமிஷனர் ஜெயசீலன், திருப்போரூர் எம்.எல்.ஏ. பா.விஜயராஜ், மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் எஸ்.சக்திவேல் ஆகியோர் முன்னிலையில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் பட்டம் விடும் திருவிழாவை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு சுற்றுலாத் துறை மற்றும் 'குளோபல் மீடியா பாக்ஸ்' (Global Media Box) ஆகியவை இணைந்து, ஆகஸ்ட் 14-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை TTDC ஓஷன் வியூ (Ocean View) வளாகத்தில் இந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தன. இந்த விழாவில், இந்தியாவின் பஞ்சாப், தமிழ்நாடு, குஜராத், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்களும், இந்தோனேசியா, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களும் கலந்துகொண்டு பட்டங்களை பறக்கவிட்டனர். சுதந்திர தின விடுமுறையில் நடைபெற்ற இந்த திருவிழாவில் இந்திய தேசிய கொடி, ஆமை, டால்பின், ஆக்டோபஸ், மிக்கி மவுஸ், ஜல்லிக்கட்டு காளை, சூப்பர்மேன், மீன்கள், டிராகன் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் எல்.இ.டி. விளக்குகளுடன் ஜொலித்த பட்டங்கள் வானில் பறந்த காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. வானில் பறந்த வண்ணமயமான பட்டங்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்ததுடன், பல்வேறு இடங்களில் நின்று புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர். மாமல்லபுரத்தில் 3 நாட்கள் கோலாகலமாக நடைபெற்ற இந்த பட்டம் விடும் திருவிழா 16-ந்தேதி(நேற்று) நிறைவடைந்தது. இந்நிலையில், மாமல்லபுரம் பட்டம் விடும் திருவிழாவில் சுமார் 40,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாக தமிழ்நாடு சுற்றுலாத்துறை தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/kite-festival-in-mamallapuram-concludes-over-40000-people-participated




