சென்னை, சட்டசபையில் வீரவசனம் பேசுவது மட்டும் போதாது ஜோசப் விஜய்யே; வீதியில் நடக்கும் படுகொலைகளைத் தடுத்து நிறுத்துங்கள் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- கந்துவட்டிக் கொடுமை தலைநகர் சென்னையில் சட்டம் - ஒழுங்கு முற்றிலுமாகச் சீர்குலைந்து, கந்துவட்டி மாபியாக்களின் கூடாரமாகத் தமிழகம் மாறிவிட்டதற்குத் திருவொற்றியூரில் நிகழ்ந்த இளைஞர் பிரதீப்பின் கொடூரப் படுகொலையே அப்பட்டமான சாட்சியாக இருக்கிறது. "என்னை ரவுடிகள் கொல்லப் பார்க்கிறார்கள், காப்பாற்றுங்கள்" என்று காவல் நிலையத்தின் வாசலிலேயே நின்று ஊடகங்களிடம் கதறிய பிரதீப், அடுத்த நாளே நடுரோட்டில் விரட்டி விரட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது ஒட்டுமொத்த தமிழகத்தையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கந்துவட்டிக் கொடுமையால் தவித்து, உயிருக்கு அஞ்சிக் காவல் நிலையத்திற்குப் பாதுகாப்பு தேடிச் சென்ற இளைஞரைக் காப்பாற்ற முடியாத இந்த ஆட்சிக்கு எதற்கு ஒரு காவல்துறை? உதவி கேட்டுச் சென்றவரைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, காவல் ஆய்வாளரே கந்துவட்டிக் கும்பலுக்கு ஆதரவாக நின்று மிரட்டியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அதிர்ச்சியளிக்கிறது. படுகொலைக்கு பொறுப்பேற்க வேண்டும் ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திலேயே சமூக விரோதிகளிடம் அமைதியைத் தாரைவார்த்த தவெக அரசே இந்தப் படுகொலைக்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும். நடுரோட்டில் கதறும் அந்த ஏழைத் தாய்க்கு நீதி கிடைக்க, குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்வதுடன், ரவுடிகளுக்குத் துணைபோன காவல் ஆய்வாளர் மீதும் பணிநீக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். மேலும், சட்டசபையில் வீரவசனம் பேசுவதை விடுத்து, வீதியில் நடக்கும் கொலைவெறியாட்டங்களைத் தடுத்து மக்களின் உயிரைக் காப்பதில்தான் ஓர் ஆட்சியாளரின் உண்மையான நிர்வாகத் திறமை அடங்கியிருக்கிறது என்பதை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் உணர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/merely-mouthing-brave-words-is-not-enoughput-a-stop-to-the-murders-taking-place-on-the-streets-nainar-nagendran




