விழுப்புரம், விழுப்புரம் கோட்டத்தில் குறைந்த வருவாய் ஈட்டிய 136 புறநகர் பஸ்களின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற் படுத்தியுள்ளது. விழுப்புரம் கோட்டம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக விழுப்புரம் கோட்டத்தில் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 6 மண்டலங்கள் உள்ளன. இந்த மண்டலங்களுக்குட்பட்ட 10 மாவட்டங்களில் நாள் ஒன்றுக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழகம். 6 மண்டல போக்குவரத்துக் கழக பொது மேலாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- அரசு போக்குவரத்துக்கழகத்தின் வருவாய் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கிலும், அதிக சர்வீஸ்கள் இயக்கப்படும் வழித்தடங்களிலும், தனியார் பஸ் போக்குவ ரத்து இல்லாத வழித்தடங்களிலும் குறைந்த வருவாய் ஈட்டும் பஸ் சேவைகளை தேர்வு செய்து அவற்றை ஒவ்வொரு வாரமும் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய போக்குவரத்து குறைவாக காணப்படும் வார நாட்களில் தற்காலிகமாக நிறுத்தம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு போக்குவரத்துக்கழகத்தின் வருவாய் அதிகரிப்பதுடன், டீசல் செலவினமும் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்காலிகமாக நிறுத்தம் அதன் அடிப்படையில் அனைத்து மண்டலங்களில் இருந்தும் பஸ்களை நிறுத்தம் செய்ய முன்மொழிவுகள் பெறப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்திலும் குறைந்த வருவாய் ஈட்டும் பஸ் சேவைகள் ஆய்வு செய்யப்பட்டு போக்குவரத்து குறைவாக காணப்படும் வார நாட்களில் தற்காலிகமாக நிறுத்தம் செய்ய முன்மொழிவுகள் பெறப்பட்டன. இதன்படி விழுப்புரம் மண்டலத்திற்குட்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் 26 பஸ்களும், கடலூர் மண்டலத்தில் 28 பஸ்களும், திருவண்ணாமலை மண்டலத்தில் 34 பஸ்களும், வேலூர் மண்டலத்தில் 23 பஸ்களும், காஞ்சீபுரம் மண்டலத்தில் 15 பஸ்களும், திருவள்ளூர் மண்டலத்தில் 10 பஸ்களும் ஆக மொத்தம் 136 புறநகர் பஸ் சேவைகள் (598 முறை இயக்குதல்) நிர்ணயிக்கப்பட்ட கிலோ மீட்டரில் 71,971 கி.மீ. இயக்கத்தை போக்குவரத்து குறைவான வார நாட்களான செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் குறைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இந்த நடைமுறைகளால் அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு வருவாய் அதிகரிக்கப்பட்டு, டீசல் செலவு குறைக்கப்படும் என்று சொல்லப்பட்டாலும், 136 புறநகர் பஸ்களின் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/136-government-bus-services-in-the-villupuram-division-suspended-for-three-days-a-week-to-boost-revenue




