சென்னை, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், கனிமவள துறையில் முறைகேடுகளை கண்டுபிடிப்பதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அந்த துறைக்கான அமைச்சர் பிரபு, பல்வேறு மாவட்டங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, விதிகளை மீறி செயல்படும் குவாரிகளுக்கு, 'சீல்' வைக்க உத்தரவிட்டு வருகிறார். அத்துடன், முறைகேடுகளுக்கு காரணமான, கனிமவளத்துறை அதிகாரிகளை, ஒட்டு மொத்தமாக இடமாற்றம் செய்யவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே கருங்கல் குவாரி முறைகேடுகளை தடுக்கும் நடவடிக்கை காரணமாக, 'எம் சாண்ட்' விலையை உற்பத்தியாளர்கள் உயர்த்தினர். இதில் தொடர்புடைய சங்கங்களை அழைத்து பேசி, அமைச்சர் எச்சரிக்கை விடுத்த நிலையில், விலை உயர்வு கைவிடப்பட்டது. அதே நேரத்தில், எம் சாண்ட் நிறுவனங்கள் தரப்பில் நடக்கும் விதிமீறல்கள் குறித்து விசாரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, கனிம வளத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “தமிழகத்தில், ஆற்று மணலுக்கு மாற்றாக கருங்கல் துகள்களை ஆலைகளில் சுத்தப்படுத்தி, 'எம் சாண்ட்' தயாரிக்கப்படுகிறது. கட்டுமான பணிக்கு, இதை பயன்படுத்த அரசு பரிந்துரைத்துள்ளது. 'எம் சாண்ட்' தயாரிக்கும் ஆலைகள், பொதுப்பணி துறையில் பதிவு செய்ய வேண்டும். இந்த பதிவை, மூன்று முதல் ஐந்தாண்டுகள் வரை புதுப்பிக்கலாம். தமிழகத்தில், தற்போதைய நிலவரப்படி, 506 'எம் சாண்ட்' ஆலைகள் பதிவு செய்து செயல்படுகின்றன. இந்த ஆலைகளின் பதிவு விவரங்களை ஆய்வு செய்ததில், 40 சதவீதம் அதாவது, 200 ஆலைகள் பதிவை புதுப்பிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக, பெரும்பாலான ஆலைகள், கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, பதிவை புதுப்பிக்காமல் செயல்படுவது தெரியவந்துள்ளது. பதிவை புதுப்பிக்காத நிலையில், அந்த ஆலைகள் விற்பனைக்கு அனுப்பும், எம் சாண்டின் தரம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, புதுப்பிக்காமல் செயல்படும் நிறுவனங்கள் மீது, என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். கனிமவளத்துறை செயல்பாடுகள் குறித்து, முதல்வர் விஜய் தலைமையில் சமீபத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில், இது குறித்து. விவாதிக்கப்பட்டது. பதிவை புதுப்பிக்காமல், 'எம் சாண்ட்' உற்பத்தி, விற்பனையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள் மீது, விரைவில் நடவடிக்கை பாயும்” என்று தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/action-to-be-taken-against-m-sand-plants-that-fail-to-renew-their-registration-tamil-nadu-government-warns




