கரூரில் முதல்வர் விஜய் கலந்துகொண்ட த.வெ.க நிகழ்ச்சி, அரசு பள்ளியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் பெரும் விவாதமானது. பல்வேறு கல்வி ஆர்வலார்கள், சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்திருந்தனர். இது தொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டிருக்கும் செய்தி அறிக்கையில், ``அரசுப் பள்ளிகளில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு இடமில்லை, உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை உறுதி! அரசு சார்பில் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளைத் தவிர, எந்தவொரு கட்சியின் நிகழ்ச்சியையும் பள்ளி வளாகங்களில் மாணவர்களுக்கு காட்டக் கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை ஏற்கனவே தெளிவான உத்தரவை வழங்கியுள்ளது. கரூர் பள்ளியில் ஒளிபரப்பான தவெக நிகழ்ச்சி இந்த உத்தரவை மீறி, கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளியில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிகழ்ச்சியை நேரலை செய்து மாணவர்களுக்கு திரையிட்ட சம்பவம் தவறு." எனக் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து, அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவிட்டிருக்கிறார். இந்த நிலையில், மாவீரன் அழகுமுத்து கோனின் 69-வது குருபூஜையை முன்னிட்டு, தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பில் அவருக்கு வீர வணக்கமும், புகழஞ்சலியும் செலுத்தப்பட்டது. எழும்பூரில் உள்ள அழகு முத்து கோனின் உருவ சிலைக்கு மரியாதை செய்த உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதனிடம் 'அரசு பள்ளியில் முதல்வர் விஜய் உரை லைவ் டெலிகாஸ்ட் செய்யப்பட்டது' குறித்து கேட்கப்பட்டது. அதற்கு `அதில் என்ன இருக்கிறது.' எனக் கேள்வியைக் கடந்து செல்ல முயன்றார். தொடர்ந்து ஊடகவியலாளர்கள் அது தொடர்பாக கேள்வி எழுப்பினர். அப்போதும், `அதைப்பற்றி அவர்களிடம்தான் கேட்க வேண்டும். விசாரிக்க வேண்டும்' என மழுப்பலான பதிலையே கொடுத்தார். உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் `இதுபோல எந்த முதல்வர் பேச்சும் ஒளிபரப்பட்டது இல்லையே' எனக் கேட்டது, `அப்படியெல்லாம் இல்ல சார். எல்லா லெவல்லயும்தான் நடந்திருக்கு. இது ஒன்னும் புதுசு கிடையாது. இதுக்கு முன்னாடி எல்லாரும் பண்ணிருக்காங்க' என்றார். 'இதற்கு முன் யாரெல்லாம் இப்படி செய்திருக்கிறார்கள்' என்றக் கேள்விக்கு `பண்ணிருக்காங்க அவ்வளவுதான். இதுக்கு மேல கேள்விக்கு இடம்கிடையாது' எனப் புறப்பட்டு சென்றுவிட்டார். த.வெ.க-வின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ் மோகனே 'அது தவறு' என ஒப்புக்கொண்டு நடவடிக்கை எடுத்தப்பிறகும், காங்கிரஸின் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் அதை சரி என்ற ரீதியில் பேசிச்சென்றது சமூக ஆர்வலர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கரூர் பள்ளியில் ஒளிபரப்பான தவெக நிகழ்ச்சி; தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து அமைச்சர் உத்தரவு! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/government-and-politics/broadcasting-of-the-tvk-event-in-schools-minister-viswanathans-response-has-sparked-a-controversy



