தேனி, தேனி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 21 வயது வாலிபர். அவருக்கும், தேனி பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணுக்கும் கடந்த மாதம் 26-ந்தேதி திருமணம் நடந்தது. இருவீட்டு பெற்றோரும் இந்த திருமணத்தை நடத்தி வைத்தனர். இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி அந்த வாலிபர் தனது மனைவியை அழைத்துக் கொண்டு மாமனார் வீட்டுக்கு சென்றார். அங்கு மனைவியை விட்டுவிட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவருடைய செல்போன் எண்ணும் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அந்த இளம்பெண் தேனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தனர். திருமணமான 9 நாட்களில் புதுமாப்பிள்ளை மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர் திருப்பூர் பகுதியில் இருப்பது தெரிய வந்தது. இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாத அவர், தான் காதலித்த பெண்ணுடன் ஓட்டம் பிடித்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், 'மாயமான வாலிபர் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி, கணவரை பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வேறு பெண்ணை அந்த வாலிபருக்கு திருமணம் செய்து வைத்தனர். இந்த நிலையில் தான் அவர் திடீரென மாயமாகியுள்ளார்' என்றனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/leaving-his-wife-at-his-in-laws-house-he-eloped-with-his-newlywed-girlfriend




