தமிழகம் முழுவதும் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்துக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை லஞ்சம் பெறுவதாக விழுப்புரத்தை சேர்ந்த த.வெ.க வழக்கறிஞரணி நிர்வாகியான ஞானசவுந்தரி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த சம்பவம், ஏற்கெனவே அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண் வழக்கறிஞர் ஒருவரிடம் அரசு வழக்கறிஞர் பதவிக்கு ரூ.15 லட்சம் பேரம் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மத்திய மாவட்ட த.வெ.க செயற்குழு உறுப்பினர் அனிஷ் குமார் என்பவர் பெண் வழக்கறிஞர் ஒருவரிடம் வாட்ஸ் அப் காலில் அரசு வழக்கறிஞர் பதவிக்காக பேரம் பேசும் அந்த ஆடியோவில், அரசு வழக்கறிஞர் பொறுப்பைப் பெற்றுத் தருவதற்காக ரூ.15 லட்சம் கேட்பதாகக் கூறுகிறார். மேலும், பிற வழக்கறிஞர்கள் பலர் ரூ.15 லட்சம் வரை கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அவர்களின் நடத்தையைக் காரணம் காட்டி வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாகவும் கூறுகிறார். இரணியல் நீதிமன்றத்தில் 7 ஆண்டுகள் வழக்கறிஞராக அனுபவமுள்ள அந்தப் பெண் வழக்கறிஞர், தான் த.வெ.க-வுக்காக வாக்கு கேட்டதாகவும், அக்கட்சியில் உள்ளதாகவும் தெரிவிக்கிறார். மேலும், இவ்வளவு பெரிய தொகையைத் தன்னால் திரட்ட முடியாது எனக் கூறும் பெண் வழக்கறிஞர், தொகையைக் குறைக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறார். மாவட்டச் செயலாளர் அறிக்கை அதற்கு அனிஷ் குமார், இடையில் இடைத்தரகர்கள் யாரும் இல்லாததால் கமிஷன் தொகையைக் குறைத்து, ரூ.12 லட்சத்திலிருந்து ரூ.12.5 லட்சத்திற்குள் பேசி முடிப்பதாகக் கூறுகிறார். மேலும், விவரங்களைப் பதிவு செய்து அப்லோட் செய்த 10 நாள்களில் நியமன ஆணை கையில் கிடைத்துவிடும் என்றும் தெரிவிக்கிறார். மேலும், வழக்கு தொடர்பான நிலப் பிரச்னைகளில் 'ஜி.பி ஒப்பீனியன்' கொடுப்பதன் மூலம் இந்தத் தொகையை எளிதாக சம்பாதித்துவிடலாம் என்றும் ஆசைகாட்டுகிறார். மாவட்ட நீதிமன்றம் மற்றும் கீழ் நீதிமன்றங்களில் போதிய முன் அனுபவம், முறையான பணி சார்ந்த புகைப்படங்கள் அல்லது கட்சிப் பங்களிப்பு போன்ற ஆதாரங்கள் ஏதும் இல்லாத நிலையிலும், பணத்தைப் பெற்றுக்கொண்டு 'ஜி.பி' பொறுப்பை உறுதிசெய்து தருவதாக அனிஷ் குமார் உறுதி அளிக்கிறார். த வெ.க குமரி மத்திய மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமாருடன் அனிஷ்குமார் கட்சி மேலிடத்துடன் தொடர்பிருப்பதாகக் கூறி, அரசு வழக்கறிஞர் பதவிக்கு பகிரங்கமாக பல லட்சங்களில் பேரம் பேசப்படும் இந்த ஆடியோ உரையாடல், வழக்கறிஞர்கள் மத்தியிலும் பொதுமக்களிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து த.வெ.க மாவட்ட செயற்குழு உறுப்பினர் பதவியில் இருந்து அனிஷ் குமார் நீக்கப்பட்டுள்ளார். இது குறித்து த வெ.க கன்னியாகுமரி மத்திய மாவட்டச் செயலாளர் கிருஷ்ணகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: `த.வெ.க கன்னியாகுமரி மத்திய மாவட்ட செயற்குழு உறுப்பினராக பயணித்துவந்த எம்.அனிஷ் குமார் என்பவர், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் செயல்பட்டதாக ஆடியோ வெளிவந்த நிலையில், அவர் கட்சியின் செய்ற்குழு பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுகிறார்.' இவ்வாறு அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/government-and-politics/tvk-cadre-got-suspended-from-the-party-after-audio-went-viral




