நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வலியுறுத்தி, இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தொடர் பேரணி நடத்தினர். இதனால் கடந்த சில நாள்களாக டெல்லியே ஸ்தம்பித்துப் போயிருக்கிறது. போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், டெல்லி போராட்டம் நாடு முழுவதும் மாணவர்கள் எழுச்சி போராட்டமாக வெடித்திருக்கிறது. இதற்கிடையில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விசாரிக்க வேண்டும் எனவும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதேபோல மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. உச்ச நீதிமன்றம் இந்த மனுக்கள் மீதான விசாரணையின்போது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள், ``காவல்துறையினர் எவ்வாறு தடியடி நடத்தினார்கள், கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினார்கள் என்பதற்கான காணொளி ஆதாரங்கள் எங்களிடம் இருக்கின்றன. அவற்றை நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும். போராட்டக்காரர்கள் கொடூரமான முறையில் தாக்கப்பட்டதால் தான் மாணவர்கள் இன்னும் போராட்டத்தைத் தொடர்கின்றனர். எனவே நீதிமன்றம் இதில் தலையிட வேண்டும். அமைதியான பொதுப் போராட்டத்தின் போது, டெல்லி காவல்துறையால் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டது மற்றும் நீதிமன்றத்தின் கட்டுப்படுத்தும் தீர்ப்புகள் மதிக்கப்படாதது குறித்து நீதிமன்றம் தாமாக முன்வந்து (suo motu) விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்." என வாதிட்டனர். அதைத் தொடர்ந்து தலைமை நீதிபதி சூர்ய காந்த், ``வழக்கு குறிப்பிடும் கட்டத்தில் (mentioning stage) எங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள், எந்தக் காணொளியையும் நாங்கள் பார்க்க விரும்பவில்லை" என்று கூறி வழக்கறிஞர்களின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் முற்றிலுமாக நிராகரித்துவிட்டது. ஏற்கெனவே செவ்வாயன்று, நாடாளுமன்றத்தை நோக்கிய 'காக்ரோச் ஜனதா கட்சி'யின் போராட்ட பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் மீது டெல்லி காவல்துறை அளவுக்கு அதிகமான பலத்தைப் பயன்படுத்தியது தொடர்பான மனுவை அவசரமாக பட்டியலிட டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. டெல்லி உயர் நீதிமன்றம் மேலும், டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா மற்றும் நீதிபதி தேஜஸ் காரியா அடங்கிய அமர்வு மனுதாரரிடம், ``இவற்றுக்கெல்லாம் நீதிமன்றத்தை இழுக்காதீர்கள்" எனக் குறிப்பிட்டு இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர். அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரம் தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா மற்றும் நீதிபதி தேஜஸ் காரியா அடங்கிய அமர்வு முன் வழக்கறிஞரால் மீண்டும் குறிப்பிடப்பட்டது. இந்த நிலையில், டெல்லி காவல்துறை அளவுக்கு அதிகமான பலத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் பொதுநல வழக்கை இன்றே அவசரமாக விசாரிக்க டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதித்துள்ளது. இந்தச் சம்பவம் முழு நாட்டின் மனசாட்சியையும் உலுக்கியுள்ளதாக வழக்கறிஞர் கூறினார். இதையேற்று, வழக்கினை இன்றே விசாரிக்க நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. மாணவர்கள் போரட்டம்: மூக்கில் ரத்தம்; குண்டுகட்டாக கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி! - என்ன நடந்தது? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/government-and-politics/judiciary/regarding-the-delhi-lathi-charge-incident-the-supreme-court-has-stated-do-not-waste-our-time-and-your-time




