சென்னை, சென்னை அண்ணாநகரில் ரூ.2.95 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட போகன்வில்லா பூங்காவினை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- சென்னை மாநகராட்சி, அண்ணாநகர் மண்டலம், வார்டு-102க்குட்பட்ட 6-வது நிழற்சாலை பகுதியில் மாநகராட்சியின் மூலதன நிதியின் கீழ் ரூ.2.95 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட போகன்வில்லா பூங்காவினை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று (06.07.2026) பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்து, மரக்கன்றினை நட்டார். இதனைத் தொடர்ந்து, அமைச்சர் பூங்காவில் உள்ள குழந்தைகள் விளையாடும் பகுதி, செயற்கை நீரூற்று, மின்விளக்கு வசதி, திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளைப் பார்வையிட்டு மக்களுடன் கலந்துரையாடினார். இப்பூங்காவினைத் தொடர்ந்து சிறப்பாக பராமரித்திட அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இப்பூங்காவானது சுமார் 12,800 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இப்பூங்காவில் பசுமைப் பரப்பினை அதிகரிக்கும் வகையில் 1,350க்கும் மேற்பட்ட 30 வகையான மரங்கள் மற்றும் செடிகள், 17,000 சதுர அடி பரப்பளவில் நடைபாதை வசதி, 44 எண்ணிக்கையிலான அலங்கார மின்விளக்குகள் வசதி, நவீன திறந்தவெளி உடற்பயிற்சி மையம், தியானக் கூடம், குழந்தைகளுக்காக 10-க்கும் மேற்பட்ட விளையாட்டு உபகரணங்களுடன் விளையாட்டுப் பகுதி, பொதுமக்கள் அமர்ந்து ஓய்வெடுக்க 3 வெவ்வேறு வகையிலான 50-க்கும் மேற்பட்ட இருக்கைகள், 3 எண்ணிக்கையிலான நிழற்குடைகள் (Pergolas), ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறைகள், செயற்கை நீரூற்று, 120 நீர் தெளிப்பான் (Sprinkler) வசதி உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகளுடன் ரூ.2.95 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட போகன்வில்லா பூங்காவினை அமைச்சர் மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். இந்த பூங்காவினால் நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைவர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-sengottaiyan-inaugurated-a-park-in-annanagar-upgraded-at-a-cost-of-rs-295-crore




