மதுரை, மதுரையில் ‘ஜனநாயகம் காப்போம் 2026’ என்ற பெயரில் நடைபெற்ற மாணவர்கள் நாடாளுமன்றம் நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- “இப்போது புதிய இளைய தலைமுறையினரை ஜென்-ஸி(Gen-Z) தலைமுறை என்று அழைக்கிறார்கள். அவர்கள் எதை விரும்புகிறார்கள், என்ன மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதை முன்கூட்டியே யூகிக்க முடியவில்லை, கணிக்க முடியவில்லை. தலைவர் ஒருவர் அழைப்பு விடுக்காமலேயே அமைப்பு ஒன்று உருவாகாமலேயே லட்சக்கணக்கில் திரளும் உளவியல் பொது உளவியலாக வளர்ந்திருக்கிறது. ஜல்லிக்கட்டு புரட்சிக்கு எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்க முடியாது. நாங்கள்தான் இதை ஒருங்கிணைத்தோம் என்று எந்த ஒரு தலைவரும் பொறுப்பேற்க முடியாது. ஆனால் லட்சக்கணக்கானவர்கள் பல நாட்கள் மெரினாவில் கூடியது நம்மையே உலுக்கி எடுத்தது. ஒரு அரசையே பணிய வைத்தது. ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை திரும்பப் பெற வைத்தது. ஜல்லிக்கட்டுக்கான உரிமையை நாம் வென்றெடுத்தோம். நாம் வென்றெடுத்தோம் என்று ஒவ்வொருவரும் உரிமை கோரிக் கொள்ளலாம், ஆனால் நான்தான் ஒருங்கிணைத்தேன் என்று யாரும் சொல்ல முடியாது. அப்படி ஒரு புரட்சியை இளைய தலைமுறையினர் தமிழ் மண்ணில் நிகழ்த்திக் காடியதைப் போல், தலைநகர் டெல்லியில் ஒரு அமைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது என்றாலும் கூட, அந்த அமைப்பு முறைப்படி வடிவமைக்கப்பட்ட அரசியல் அமைப்பு அல்ல. சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஒருவர் வாய் தவறி ‘கரப்பான்பூச்சிகள்’ என்று சொல்லப்போக, ‘எங்களைப் பார்த்து கரப்பான்பூச்சி என்று சொல்கிறீர்களா? இதோ நாங்கள் வந்துவிட்டோம் என்று டெல்லியை நோக்கி சாரை சாரையாய் கிளம்பிச் சென்று தலைநகரையே திணற வைத்தார்கள். இந்திய அரசு பணிந்தது. மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். இது இந்த தலைமுறையினர் நிகழ்த்திக் காட்டியிருக்கும் ஒரு புரட்சி.” இவ்வாறு அவர் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/it-is-impossible-to-predict-what-kind-of-change-the-younger-generation-desires-thirumavalavan




