சேலம், மேட்டூர் அணை நீர்மட்டம் மேட்டூர் அணை கட்டுமான பணி தொடங்குவதற்கு முன்பு தற்போதைய அணையின் நீர்த்தேக்க பகுதிகளில் ஏராளமான கிராமங்கள் இருந்தன. அணை கட்டுமான பணி முடிக்கப்பட்ட பிறகு அந்த கிராமங்களில் இருந்த பொதுமக்கள் அந்த பகுதியை விட்டு வெளியேறி வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தனர். இருப்பினும் அவர்கள் வழிபட்டு வந்த தலங்களான ஜலகண் டேஸ்வரர் கோவில், இரட்டை கோபுரங்களுடன் கூடிய கிறிஸ்தவ ஆலயம் தண்ணீரில் மூழ்கின. இவை அணையின் நீர்மட் டம் 78 அடிக்கு கீழ் குறையும் நேரங்களில் நீர்மட்டத்திற்கு மேலே கிறிஸ்தவ ஆலய கோபுரம் காட்சி அளித்தும், அணையின் நீர்மட்டம் உயரும் நேரங்களில் தண்ணீரில் மூழ்கும் நிலையும் உள்ளது. அதே போல் நீர்மட்டம் 68 அடிக்கு கீழ் குறையும் போது, நந்தி சிலையும் காட்சி அளிக்கும். கிறிஸ்தவ ஆலய கோபுரம் தற்போது அணையின் நீர்மட்டம் 77 அடிக்கு கீழ் குறைந்துள்ளது. இதனால் அணையின் நீர்த்தேக்க பகுதியான சேத்துக்குளியில் அமைந்துள்ள கிறிஸ்தவ ஆலய கோபுரம் தண்ணீர் மட்டத்திற்கு மேலே காட்சியளிக்க தொடங்கி உள்ளது. அதாவது கடந்த காலங்களில் அணை நீர்மட்டம் 78 அடிக்கு கீழ் சரியும் நேரங்களில் கிறிஸ்தவ ஆலய இரட்டை கோபுரங்கள் தண்ணீர் மட்டத்திற்கு மேலே காட்சியளிக்க தொடங்கும். இதில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கோபுரம் இடிந்து விழுந்து சேதம் அடைந்து விட்டதால் அதன்பிறகு ஒற்றை கோபுரமே அடையாளமாக காட்சி அளித்து வருகிறது. இந்த ஒற்றை கோபுரத்தின் நுனிப்பகுதியில் சிறிது, சிறிதாக சேதம் அடைந்து வருவதால் தற்போது இந்த கோபுரம் தண்ணீர் மட்டத்திற்கு மேலே காட்சியளிக்க வேண்டும் எனில் அணை நீர்மட்டம் 77 அடிக்கு கீழ் குறைந்தால் மட்டுமே தெரியும் என்ற நிலையை எட்டி உள்ளது. சுற்றுலா பயணிகள் கிறிஸ்தவ ஆலயத்தின் கோபுரம் தண்ணீர் மட்டத்திற்கு மேலே காட்சியளிக்க தலை தூக்கி உள்ளது. இதற்கு முன்பு 2024-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் காட்சியளித்த கிறிஸ்தவ ஆலய கோபுரம் அதன்பிறகு நீர்மட் டம் 77 அடிக்கு கீழ் குறையாததால் 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தற்போது தான் தண்ணீர் மட்டத்திற்கு மேலே காட்சி அளித்து வருகிறது. அணையின் நீர்மட்டம் மேலும் குறையும் போது, கிறிஸ்தவ ஆலய கோபுரத்தின் உயரமும் முழுவதுமாக தெரிய தொடங்கும். இந்த ஒற்றை கோபுரம் தென்பட தொடங்கி விட்டதால் வரும் வாரங்களில் விடுமுறை நாட்களில் இதை காண, சுற்றுலா பயணிகள் பண்ணவாடி பரிசல் துறைக்கு அதிகளவில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிருந்து பரிசல் சவாரி செய்து இந்த கோபுரத்தை காண செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/water-level-low-christian-church-tower-submerged-in-mettur-dam-visible




