சென்னை, தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழக மீனவர்கள் இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது, இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், மீனவர்கள் கைது செய்யப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டு அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து வெளியுறவுத்துறை அமைச்சகம் உரிய விளக்கம் தர வேண்டுமென கோரிக்கை விடப்பட்டுள்ளது. சர்வதேச கடல் எல்லையை கடப்பதாக கூறி இத்தகைய நடவடிக்கைகள் எடுப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலில் மீன்பிடிப்பதை தங்களது வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். தங்களது தொழிலை செய்ய விடாமல் தடுத்து வருகிற இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களிலிருந்து தமிழக மீனவர்களை காப்பாற்ற வேண்டுமென ஒன்றிய பா.ஜ.க. அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இப்பிரச்சினையிலிருந்து தமிழக மீனவர்கள் நிரந்தரமாக பாதுகாப்பினை பெறுகிற வகையில் இந்திய - இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் இணைந்த கூட்டு நடவடிக்கைக்குழு அமைத்து இத்தகைய கைது நடவடிக்கைகளை கண்காணித்து உரிய தீர்வினை காண வேண்டுமென்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு வரை 1,306 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதோடு, 179 படகுகள் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இத்தகைய கைது நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தி தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பை ஒன்றிய பா.ஜ.க. அரசு அலட்சியப் போக்குடன் தட்டிக் கழித்து வருவது தமிழக மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. எனவே, கடலில் மீன்பிடித்து வாழ்ந்து கொண்டிருக்கிற அப்பாவி தமிழக மீனவர்களை பாதுகாக்க, இலங்கை அரசுடன் பேசி மீனவர்களை உடனடியாக விடுவிப்பதோடு, பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் திரும்ப ஒப்படைக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஒன்றிய பா.ஜக. அரசை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/tamilaga-meenavargal-meethana-ilangai-kadarpadaiyin-kaithu-nadavaikkaigalai-thaduthu-niruththa-ven-dum-manikkam-thagur




