சென்னை, தமிழக காவல்துறையில் ஆள் பற்றாக்குறை காரணமாக போலீசாருக்கு வார விடுமுறை தருவதில் சிக்கல் நீடித்து வந்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின்போது, ‘காவல் துறையில் பணிபுரியும் இரண்டாம் நிலை காவலர்கள் முதல், சப்-இன்ஸ்பெக்டர்கள் வரையிலானவர்களுக்கு, வார விடுமுறை தரப்படும்’ என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அந்த அரசாணையின்படி போலீசாருக்கு, சென்னை, திருச்சி, கோவை, மதுரை போன்ற பெரு நகரங்களில், வார விடுமுறை தரப்பட்டு வந்தாலும், மாவட்டங்களில், பணியாளர் பற்றாக்குறை காரணமாக, போலீசாருக்கு வார விடுமுறை தருவது, முடியாத காரியமாகிவிட்டது. இது தொடர்பாக, கடந்த ஆண்டு, சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் காவலர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, 'போதிய எண்ணிக்கையில் காவலர்கள் இல்லாததால், அரசாணையை நடைமுறைப்படுத்த முடியவில்லை' என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, 'இந்த நடைமுறை சிக்கலை அரசாணை பிறப்பிக்கும் முன் யோசித்து இருக்க வேண்டும்' என்று தெரிவித்த நீதிமன்றம், போலீசாருக்கு வார விடுமுறை தராததால், அவர்களின் குடும்பத்தாரும் பாதிக்கப்படுவதால், அரசாணையை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது. தமிழகத்தில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையிலும், போலீசாருக்கு வார விடுமுறை தருவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், “காவல்துறையில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை, 10 ஆயிரத்தை தாண்டிவிட்டது. இதனால், இரண்டாம் நிலை காவலர்கள் முதல் எஸ்.ஐ.,க்கள் வரை, 65,000 பேர் மட்டுமே, பணிபுரிந்து வருகின்றனர். காவல்துறைக்கு புதிதாக ஆட்கள் தேர்வு செய்வதை, அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைத்துள்ளனர். இதனால், எங்களுக்கு பணிச்சுமை அதிகரித்துவிட்டது. பல மாவட்டங்களில், போலீசாருக்கான வார விடுமுறை நிறுத்தப்பட்டு விட்டது” என்று தெரிவித்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/police-recruitment-postponed-difficulties-in-granting-weekly-offs-to-police-personnel-workload-increases




