சென்னை, மேயர் பிரியா தலைமையில் ஆசிரியர் தின விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு மேயர் பிரியா பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- மேயர் பிரியா தலைமையில் சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள அம்மா மாளிகைக் கூட்டரங்கில் ஆசிரியர் தின விழா இன்று (11.09.2026) நடைபெற்றது. இவ்விழாவில் இணை ஆணையாளர் (கல்வி) க. கற்பகம், கல்வி அலுவலர் ஜெ. வசந்தி மற்றும் உதவி கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் ஆசிரியர்களுக்கு பள்ளிகள் அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் பாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 515 ஆசிரியர்களுக்கு மேயர் பிரியா பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் சார்பில் ஆண்டுதோறும் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டு சென்னை பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு பிரிவாகவும், உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு பிரிவாகவும் விளையாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் பாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் பேசிய மேயர் பிரியா, "ஆசிரியர் தின விழாவினை முன்னிட்டு, அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாணவர்களின் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கி வாழ்வின் வழிகாட்டியாகவும் ஆசிரியர்கள் திகழ்கின்றனர். ஆசிரியர் பணி மகத்தானது. ஒவ்வொரு மாணவரின் வளர்ச்சியிலும் ஆசிரியரின் பங்கு உள்ளது. ஒவ்வொரு மாணவரும் வளர்ந்து பின்னாளில் உயர் பதவிக்கு வந்தாலும், நல்ல தொழில் செய்து முன்னேறினாலும் தனது முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களை என்றும் நன்றியோடு நினைவு கூர்வார்கள். சென்னை மாநகராட்சியில் 417 சென்னை பள்ளிகள் உள்ளன. இவற்றில் சிறந்த உட்கட்டமைப்பும், மாணவர்களுக்கான பல்வேறு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு முன்னேற்றமான கல்வியை வழங்கி வருகிறோம். இதில் படிக்கும் மாணவர்கள் தங்களது ஆசிரியர்களை முன்மாதிரியாகக் கொண்டு முன்னேற்றத்தை நோக்கி செல்கின்ற வகையில் ஆசிரியர்கள் பணியாற்றிட வேண்டும். தற்போது தொழில் நுட்ப வளர்ச்சி பெருகி வரும் நிலையில் இதனை மாணவர்கள் நல்ல வழியில் பயன்படுத்திக் கொள்வதற்கு ஆசிரியர்கள் வழிகாட்டிட வேண்டும்" என்று கூறினார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/teachers-day-celebration-under-mayor-priya-515-teachers-honoured




