சென்னை, தமிழ்த்தாய் வாழ்த்தை முதலாவதாகப் பாட வலியுறுத்தும் தீர்மானத்தை தமிழகச் சட்டமன்றத்தில் இயற்றிய ஆளும் தவெக அரசுக்கு என்னுடைய வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள் அனைத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்தே முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழகச் சட்டமன்றத்தில் இயற்றப்பட்டுள்ள தீர்மானத்தை முழுமையாக வரவேற்கிறேன். மொழியை ஏற்றிருக்கிற நிலம்தான் தேசமாகவும், மொழியை அடிப்படையாகக் கொண்டுள்ள மக்கள் கூட்டம்தான் தேசிய இனமாகவும் வரையறுக்கப்படுகிறது. ஒரு இனத்தின் கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு, வழிபாடு, வாழ்வியல், அரசியல் எல்லாம் மொழியிலிருந்துதான் பிறக்கிறது. அதனால்தான், மொழியைத் தாயென்று போற்றுகிறோம். மொழியே ஒரு இனத்தின் முகம், முகவரி, அடையாளம் என எல்லாவுமாகத் திகழ்கிறது. தமிழர்களின் வரலாற்றுத் தாயகமான தமிழ்நாட்டில் தமிழை முதன்மைப்படுத்தப்பட வேண்டியது தமிழர் நிலத்தை ஆளுகை செய்யும் ஆட்சியாளர்களின் தார்மீகக் கடமையாகும். அந்த வகையில், தமிழர் தாய்நிலத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தே முதலாவதாகப் பாடப்படுவதை உறுதிசெய்ய முன்வர வேண்டும். அதுவே தமிழ்த்தேசிய இனத்தின் இறையாண்மையையும், தமிழர்களின் தன்மான உணர்வையும் மதித்துப் போற்றுவதாக அமையும். அதுபோல, ஒவ்வொரு தேசிய இனத்தின் தாயகத்திலும் அந்தந்த இனத்தின் தாய்மொழியைப் போற்றும் பாடலே முதன்மையாக இடம்பெற வேண்டும். வேறுபட்ட மொழி, பண்பாடு, வாழ்வியல் கொண்ட வெவ்வேறு தேசிய இனங்கள் ஒன்றுபட்டு, ஒரே நாட்டுக்குள் வாழ்வதால்தான் வேற்றுமையில் ஒற்றுமை என நாட்டின் பன்மைத்துவம் போற்றப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளைவிட அதிக மாறுபாடுகளைக் கொண்டிருந்தாலும், இந்நாட்டில் பல்வேறு மொழிவழித் தேசிய இனங்கள் ஒரே நாட்டுக்குள் ஒன்றிணைந்து வாழ்வதைக் கண்டு, உலக நாடுகள் வியக்கின்றன. அத்தகைய தேசிய இனங்களின் தன்னுரிமையையும், தனித்துவ அடையாளத்தையும் பாதுகாப்பதே இந்திய ஒன்றியத்தின் ஒருமைப்பாட்டுக்கு ஏற்றதாகும். மாறாக, தேசிய இனங்களின் உரிமைகளை மறுத்து ஒற்றை மொழியையும், ஆதிக்கத்தையும் திணிக்க முற்பட்டால், அது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு உணர வேண்டும். ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே சட்டம், ஒரே தேர்தல், ஒரே தேர்வு, ஒரே வரி, ஒரே ராணுவத்தளபதி, ஒரே உணவுச்சந்தை என எல்லாவற்றையும் ஒற்றைமயப்படுத்தும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு, நாட்டுப்பண்ணை மட்டும் இரண்டாகத் திணிப்பது கேலிக்கூத்தாகும். மதச்சார்பு கொண்ட ‘வந்தே மாதரம்’ எனும் பாடலை வலியத் திணிப்பதும், தேசிய இனங்களின் மொழியைப் போற்றும் பாடலை பின்னுக்குத் தள்ளுவதுமானப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. தமிழ்த்தாய் வாழ்த்தே தமிழ்நாட்டில் முதன்மைப்பாடலாகப் பாடப்பட வேண்டும் எனும் தமிழர்களின் ஒருமித்தக் கருத்தோட்டத்தின் விளைவாக, தமிழ்த்தாய் வாழ்த்தை முதலாவதாகப் பாட வலியுறுத்தும் தீர்மானத்தை தமிழகச் சட்டமன்றத்தில் இயற்றிய ஆளும் தவெக அரசுக்கும், தமிழ்நாட்டு முதல்வர் விஜய்க்கும், தீர்மானத்தை ஆதரித்துத் துணைநின்ற அனைத்துக்கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-thai-vaalthai-muthalavathaga-paada-korum-tamilaga-sattamandra-theermaanam-varaverpukkuriyathu-seeman




