திருநெல்வேலி, டியூஷன் சென்டருக்கு மகளை அழைக்கச் சென்ற திருமண மண்டப உரிமையாளர், மகள் கண்முன்னே 4 பேர் கொண்ட மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கல்லிடைக்குறிச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமண மண்டப உரிமையாளர் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் கண்ணன் (வயது 52). இவர் அம்பாசமுத்திரத்தில் திருமண மண்டபம் நடத்தி வந்தார். தற்போது மனைவி சாந்தி மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் மகளுடன் கல்லிடைக்குறிச்சி அகஸ்தியர் கோவில் சன்னதி தெரு பகுதியில் வசித்து வந்தார். இவரது மகள் அருகில் உள்ள ஒரு தெருவில் இயங்கி வரும் டியூஷன் சென்டரில் படித்து வருகிறார். மகள் கண்முன்னே தந்தை வெட்டிக்கொலை நேற்று இரவில் தனது மோட்டார் சைக்கிளில் மகளை வீட்டிற்கு அழைத்து வருவதற்காக கண்ணன் சென்றுள்ளார். டியூஷன் சென்டர் வாசலில் நின்று கொண்டிருந்த மகளை அவர் அழைத்தபோது, அங்கு மறைந்திருந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென கண்ணனை சூழ்ந்து கொண்டு, தாங்கள் வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த வெட்டுக்காயமடைந்த கண்ணன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தந்தை தனது கண்முன்னே கொல்லப்பட்டதைக் கண்டு அவரது மகள் அலறித் துடித்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் அக்கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது. போலீசார் ஆய்வு இதுகுறித்த தகவலறிந்து திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஸ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி மற்றும் கல்லிடைக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குற்றவாளிகளைக் கண்டறிய, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். 2 பேர் கைது இந்த கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இருப்பினும் முன்விரோதம், இடப்பிரச்சினை, சொத்து தகராறு அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பிச் சென்ற 4 பேர் கொண்ட மர்ம கும்பலை தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக தற்போது வெங்கடேஷ், சூர்யா இசக்கி ஆகிய 2 பேரை, 10 மணி நேரத்திற்குள் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/wedding-hall-owner-hacked-to-death-gang-of-4-commits-brutal-act-in-front-of-daughter




