மதுரை, நெல்லையை சேர்ந்த ஜெய ஆனந்தன் என்பவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “நெல்லை மாவட்டம் கூடங்குளம் பகுதியை சேர்ந்த நான் இலங்கைக்கு சென்று அந்நாட்டு குடியுரிமை பெற்று கொழும்பு நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தேன். கடந்த ஏப்ரல் மாதம் என் தாயாரின் மருத்துவ சிகிச்சைக்காக தமிழகம் வந்தபோது, எனது பெயர் இந்திய வாக்காளர் பட்டியலில் தொடர்ந்து இருப்பதை அறிந்து, தமிழக சட்டசபை தேர்தலில் வாக்களித்தேன். இதையடுத்து எனக்கு எதிராக குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், இலங்கைக்கு திரும்பி செல்ல அனுமதித்து உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி விக்டோரியா கவுரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “வெளிநாட்டு குடியுரிமை பெற்ற ஒருவர், வாக்காளர் பட்டியலில் பெயர் தொடர்ந்து இடம்பெற்றிருப்பதை மட்டும் காரணமாக கொண்டு இந்திய குடி மக்களுக்கு உரிய ஓட்டுரிமையை கோர முடியாது. எனவே, மனுதாரர் சம்பந்தப்பட்ட கோர்ட்டை அணுகி, தனது இலங்கை பயணம் தொடர்பான முழு விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். விசாரணைக்கு தேவைப்படும் பட்சத்தில் எப்போது அழைத்தாலும் நேரில் ஆஜராக உறுதி அளிக்கும் உத்தரவாத பத்திரத்தை தாக்கல் செய்து, இலங்கை செல்ல அனுமதி கோரி முறையாக விண்ணப்பிக்கலாம். இலங்கை குடியுரிமை பெற்றவர் தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களித்து விட்டு மீண்டும் இலங்கை செல்ல அனுமதி கோருகிறார். ஒருவர் வெளிநாடு செல்வது என்பது தனி நபர் சுதந்திரம் ஆகும். இருப்பினும் அந்த சுதந்திரம் என்பது முழுமையானதல்ல. குற்றவியல் வழக்கை எதிர்கொள்ளும் நபர் சட்டத்திற்கு உட்பட்டுதான் வெளிநாடு செல்ல முடியும். எனவே, மனுதாரர் முறைப்படி சட்ட அனுமதி பெற்றுதான் வெளிநாடு செல்ல முடியும்” என்று உத்தரவிட்டு, இந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/holders-of-foreign-citizenship-cannot-claim-indian-voting-rights-madurai-bench-of-the-madras-high-court




