சென்னை எண்ணூர் அருகே கொசஸ்தலையாறு மற்றும் எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் டன் கணக்கில் மீன்கள் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்கள் செத்து கரை ஒதுங்கி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 6 முதல் 7 கிலோமீட்டர் தொலைவுக்கு இறந்த மீன்கள் காணப்படுவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். பக்கிங்ஹாம் கால்வாய் அருகே காட்டுக்குப்பம் பகுதியில் இருந்து வடசென்னை அனல் மின் நிலையத்தை கடந்து மீன்கள் செத்து மிதப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக ரயில்வே பாலம் அருகே வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் மீன்கள் கூட்டமாக ஒதுங்கியதை மீனவர்கள் முதலில் கவனித்துள்ளனர். மாலை நேரத்தில் பல்வேறு நீர்வழிப் பகுதிகளிலும் இதேபோன்ற நிலை காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்ப மாசு காரணமா? மீன்கள் உயிரிழந்ததற்கு தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் மாசுபட்ட கழிவுநீர் காரணமாக இருக்கலாம் என மீனவர்களும், Save Ennore Creek அமைப்பினரும் குற்றம்சாட்டியுள்ளனர். குறிப்பாக பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக வரும் தொழிற்சாலை கழிவுகள் ஆற்றில் கலப்பதாக அவர்கள் கூறுகின்றனர். இதனிடையே, ஆகஸ்ட் 9ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட நீரின் வெப்பநிலை ஆய்வில் NTECL வல்லூர் நிறுவனத்தின் கழிவுநீர் வெளியேற்றும் இடத்திற்கு அருகே 40.8°C மற்றும் 40.6°C என்ற அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மீன்கள் உயிரிழப்புக்கு வெப்ப மாசும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அலை மாறியதும் அதிகரித்த மீன் உயிரிழப்பு மீன்கள் முதலில் ரயில்வே பாலம் அருகே அதிகளவில் ஒதுங்கிய நிலையில், பின்னர் அலை மாற்றத்துடன் மீன்கள் மணலி மற்றும் காட்டுப்பள்ளி பகுதிகளை நோக்கி அடித்துச் செல்லப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். பல இடங்களில் மீன்களின் உயிரிழப்பு தெளிவாகக் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. நடவடிக்கை கோரி மீனவர்கள் வலியுறுத்தல் இந்த சம்பவத்தால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் மீனவர்கள், சூடான நீர் வெளியேற்றத்தை உடனடியாக நிறுத்த வேண்டும், வாழ்வாதார இழப்புக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் (NGT) 2022ஆம் ஆண்டு எண்ணூர் கிரீக் மறுசீரமைப்பு உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து, மீன்வளத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்துள்ளனர். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் (TNPCB) ஆரம்பகட்ட நீர் மாதிரிகளை சேகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதிரிகளின் ஆய்வு முடிவுகள் வெளியாகும் நிலையில், மீன்களின் பெருமளவிலான உயிரிழப்புக்கு உண்மையான காரணம் என்ன என்பது தெளிவாகும். கொசஸ்தலையாற்றில் கொத்துக்கொத்தாக மீன்கள் செத்து மிதக்கும் நிலையில், இது வெறும் மீன் உயிரிழப்பா அல்லது எண்ணூர் நீர்நிலைகளை சூழ்ந்திருக்கும் மிகப்பெரிய மாசு அபாயத்தின் எச்சரிக்கையா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/environment/mass-fish-deaths-in-kosasthalaiyar-river-spark




