நீலகிரி, கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பாடந்தொரை பகுதியில் காட்டு யானை ஒன்று தினமும் ஒவ்வொரு கிராமங்களுக்குள் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. பின்னர் காலை நேரத்தில் முக்கிய சாலை வழியாக நடந்து செல்கிறது. இதனால் பொது மக்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் தங்களது அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். நேற்று முன்தினம் ஊருக்குள் புகுந்த காட்டு யானை செளுக்காடி பகுதியில் சுப்பிரமணி என்பவரது தோட்டத்துக்குள் புகுந்து வாழைகளை சேதப்படுத்தியது. இவ்வாறு தினமும் பாக்கு மரங்கள், பயிர்களை நாசப்படுத்து வதால் விவசாயிகள் தாங்கள் நஷ்டத்தை சந்தித்து வருவதாக கூறினர். இதனால் காட்டு யானை ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காட்டு யானைகள் இதேபோல் கூடலூர் அருகே குனில் கொல்லி மூலா பகுதியில் நேற்று மதியம் 4 காட்டு யானைகள் கூட்டமாக முகாமிட்டு இருந்தன. இதனால் விவசாயிகள், கிராம மக்கள் அச்சமடைந்தனர். தொடர்ந்து பயிர்களை யானைகள் சேதப்படுத்திவிட்டு அப்பகுதியில் நடமாடியது. இதைத் தொடர்ந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும் காட்டு யானைகளின் தொடர் வருகையால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் நெல் விவசாயம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. ஆனால், காட்டு யானைகள் தொடர்ந்து ஊருக்குள் வருவதால் நெல் பயிரிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் முளப்பள்ளி வழியாக முதுமலை வனப்பகுதிக்குள் யானைகளை விரட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/nilgiris-wild-elephants-wreak-havoc-by-damaging-agricultural-crops




