சென்னை, 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் கடந்த 15 நாட்களாக தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். இந்நிலையில், போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்களை சென்னை ரிப்பன் மாளிகையில் அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர் நிர்மல் குமார், ராஜ்மோகன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தூய்மைப் பணியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆனந்த், "முதல்-அமைச்சர் உங்களுடைய குறைகளைக் கேட்டு அறிந்துகொள்ள எங்களை இங்கு அனுப்பி வைத்துள்ளார். உங்களுடைய கோரிக்கைகள் நியாயமானவை. கடந்த ஆட்சியில் கஜானாவை காலி செய்துவிட்டார்கள். அந்த கஜானாவை மீண்டும் அதிகரிக்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். கலந்தாலோசித்து, உங்களுக்கு எந்தக் கோரிக்கையை நிறைவேற்ற முடியுமோ, அதை முதலில் செய்வோம். நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். நாம் அனைவரும் கலந்து பேசி ஒரு நல்ல முடிவை எடுப்போம்" என்று கூறினார். தொடர்ந்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார், "நீங்கள் எந்தக் கவலையையும் எதிர்கொள்ளத் தேவையில்லை. இது உங்களுடைய அரசு. உங்களை நீங்கள் வருத்திக்கொள்ளத் தேவையில்லை. அதற்காகத்தான் முதல்-அமைச்சர் வருத்தப்பட்டார். ஒவ்வொரு கட்டமாக உங்களுக்கு தேவையான வசதிகளை நாங்கள் செய்வோம்" என்றார். அடுத்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், "உங்கள் வீட்டுப் பிள்ளையாகத்தான் நாங்கள் இருக்கிறோமே தவிர, அமைச்சர்களாக இல்லை. ஒரு ராணுவக் கட்டுப்பாட்டோடு போராட்டம் நடத்திய உங்களுக்கு நான் தலைவணங்குகிறேன். கஜானா காலியாகிவிட்டது என்று அமைச்சர் ஆனந்த் சொன்னார். கஜானா காலியாகவில்லை, காணாமல் போய்விட்டது. ஆனால், மனிதாபிமானம், கருணை, மனசாட்சி காணாமல் போகவில்லை. போராடுவது உங்கள் உரிமை; நிறைவேற்றுவது எங்கள் கடமை" என்றார். இதையடுத்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “அனைத்து பிரச்சினைகளையும் உணர்வுபூர்வமாகப் பார்க்கிறோம். நீங்கள் இங்கு போராடிக்கொண்டிருக்கும்போது எங்களுக்கும், முதல்-அமைச்சருக்கும் அங்கு தூக்கம் இல்லை. போன ஆட்சியில் கடன் வாங்கி ஊழல் செய்தார்கள். இந்த ஆட்சியில் கடன் வாங்கி மக்கள் திட்டங்களுக்குப் பயன்படுத்துகிறோம். எங்களுக்கு கொஞ்சம் கால அவகாசம் வேண்டும்" என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/ministers-hold-talks-with-striking-sanitation-workers-in-chennai




