மயிலாடுதுறை, காரைக்காலில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 4 ஐம்பொன் சாமி சிலைகள் மீட்கப்பட்டன. ஐம்பொன் சாமி சிலைகள் மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே இலுவப்பட்டு கிராமத்தில் நீலகண்டேஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இங்கு 500 ஆண்டுகள் பழமையான அமிர்தகரவல்லி, சண்டிகேஸ்வரர், அப்பர், மங்களநாயகி மற்றும் ஒரு வெண்கல பாவை விளக்கு சிலை கடந்த மாதம் திருட்டு போனது. இது குறித்து கோவில் நிர்வாகம் சார்பில் மணல்மேடு போலீஸ் நிலையத் தில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஐம்பொன் சிலைகள் திருடியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். வீட்டில் பதுக்கி வைப்பு இந்தநிலையில் திருட்டுபோன ஐம்பொன் சிலைகள் காரைக்காலில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருப்பதாகவும், இதற்காக தருமபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாகவும் உளவுத்துறை மூலம் காரைக்கால் மாவட்ட போலீசுக்கு நேற்று ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து காரைக்கால் நகர போலீசார் தர்மபுரம் கீழத்தெருவில் உள்ள ஒரு வீட்டில் நேற்று அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர். அப்போது அங்கு ஐந்து சிலைகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், இலுவப்பட்டு சிவன் கோவிலில் திருட்டு போன ஐம்பொன் சிலைகள் என்பது தெரிய வந்தது. 2 பேர் கைது இது தொடர்பாக தருமபுரத்தை சேர்ந்த அபிராம சுந்தரம் என்ற அபிராம் (வயது 44), நாகை கீழ்வேளூர் ரெயிலடி தெருவை சேர்ந்த ஷாஜகான் (46) ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மீட்கப்பட்ட சிலைகளின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. கைதான அபிராமசுந்தரம், ஷாஜகான் ஆகியோர் சர்வதேச சிலை கடத்தல் கும்பலுடன் தொடர்பில் உள்ளார்களா? இவர்கள் வேறு ஏதேனும் சிலைகளை காரைக்கால் வழியாக இலங்கைக்கு கடத்தியுள்ளார்களா? என்று அவர்களிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/attempt-to-smuggle-five-metal-idols-from-karaikal-to-sri-lanka-two-arrested



